பழனியை அடுத்த வரதமாநதி அணையில் குளித்த இரட்டை சகோதரர்கள் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 23), யோகேஷ்(வயது 23), திருவேற்காட்டை சேர்ந்த ஹரீஷ்(வயது 23) மற்றும் காரைக்காலை சேர்ந்த கணேஷ்(வயது 21) ஆகிய நான்கு பேரும் கல்லூரி நண்பர்கள் ஆவர். இவர்கள் நான்கு பேரும் இன்று காலை பழனி அருகே உள்ள வரதமாநதி அணையை சுற்றிப்பார்க்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்குள்ள அணையில் 4 பேரில் ஒருவர் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற மற்றவர்கள் முயன்றபோது ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கியுள்ளனர்.
இதுகுறித்து மற்றொரு நண்பரான ஹரீஷ் என்பவர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கிய மூவரையும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். இதில் சென்னையை சேர்ந்த விக்னேஷ்,யோகேஷ் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த கணேஷ் ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து சென்னையை சேர்ந்த மற்றொரு நண்பரான ஹரிஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.