நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் ஆயில்பட்டி, கார்கூடல்பட்டி மங்களபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் பரம்பரை பரம்பரையாக வசித்து வரக்கூடிய இருளர் இன மக்களின் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ்கள் வழங்க கேட்டும், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தியும், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது .
இருளர் இனமக்கள் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய பழங்குடியின பிரிவைச் சார்ந்தவர்கள். இம்மக்கள் மலை சார்ந்த பகுதியை நம்பி தங்களுடைய வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக தேனெடுத்தல், கிழங்கு தேடுதல், எலி பிடித்தல் வேட்டையாடுதல் உள்ளிட்ட தங்களுடைய பாரம்பரிய தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இம்மக்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கல்வியிலும் மிகவும் பின் தங்கி உள்ளனர்.
தற்பொழுது படிப்படியாக இவர்களின் குழந்தைகள் கல்வி நிலையங்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.
இச்சூழலில் கல்வி நிலையத்தில் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அரசின் சலுகைகளைப் பெற இருளர் பழங்குடி இன மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ்கள் மிகவும் அத்தியாவசிய தேவையாக தற்போது உள்ளது.
குறிப்பாக பிளஸ் 1 பிளஸ் 2 மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வி நிலையங்களில் சேர்வது அரசாணை எண் 92 ன்படி தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்வியில் இலவச கல்வி பயில்வதற்கான கல்வி உதவித் தொகை பெறுவது அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலையில் சேர்வது உள்ளிட்ட பல்வேறு அரசின் சலுகைகளை பெறுவதற்கு இருளர் பழங்குடியின ஜாதி சான்றிதழ் மிகவும் அத்தியாவசிய தேவையாக உள்ளது.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இம்மக்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு மாவட்ட ஆட்சியர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.
குறிப்பாக ஆயில்பட்டி, மங்களபுரம், கார்கூடல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மூன்று கிராமங்களிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட இருளர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர் .
இதுவரை ஜாதி சான்றிதழ் பெற முடியாததால் இவர்கள் என்ன ஜாதி என்று ஜாதிச் சான்றிதழை ஒப்படைக்க முடியாததால், கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்ந்து பயிலவும் அரசு நலத்திட்ட உதவிகளையும், கல்வி உதவித் தொகையும், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர முடியாமலும் உயர்கல்வி வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தும் இருளர் ஜாதி சான்றிதழ் கிடைக்காததால் இருளர் மக்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இதுவரை இவர்கள் குடும்பத்தில் ஒருவர் கூட உயர்கல்விக்கோ, அரசின் வேலைவாய்ப்புகோ இதுவரை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இம்மக்களுக்கு சொந்த வீடு இல்லாததால் ஒரே குடிசையில் நான்கிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் .
நாகரீக சமூகத்தில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர் .
இருளர் ஜாதி சான்றிதழ் கேட்டு கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மேற்கண்ட மக்கள் பலமுறை அதிகாரிகளுக்கு விண்ணப்பித்தும் உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு சான்றிதழ்கள் வழங்காமல் இருளர் என்ற சமூகம் இருக்கின்றதா? என்று எள்ளி நகையாடுவதாக இம்மக்கள் கூறுகின்றனர் .
பள்ளிகளில் ஜாதி சான்றிதழ் இல்லாததால், ஆசிரியர்கள் இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை ஜாதி சான்றிதழ் பெற்று வந்தால் தான் வகுப்பிற்கு அனுமதிக்க முடியும் என்று அச்சுறுத்தி கல்வி நிலையங்களில் வகுப்பறைக்கு வெளியே நிற்க வைப்பதாக கூறுகின்றனர்.
சான்றிதழ் பெற முடியாததால் பல மாணவர்கள் தங்களுடைய கல்வி தொடர முடியாமல் கூலி வேலைக்கு செல்லக்கூடிய நிலை தொடர்கதையாக ஏற்பட்டுள்ளது
இதனால் பாதிக்கப்பட்ட இருளர் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட குழு சார்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க 2021 டிசம்பர் 28 அன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர்.
மாவட்ட ஆட்சியர் கொல்லிமலையில் மருத்துவ முகாமை துவக்கி வைக்க சென்றதால், இம்மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்து சாதி சான்றிதழ் வழங்குவதற்கான முகாம் தேதியை மாவட்ட ஆட்சியர் அறிவித்தால் மட்டுமே வீடுகளுக்கு செல்வோம் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கின்றனர்
இப்போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் ஏ டி. கண்ணன் மாவட்ட செயலாளர் டி. சரவணன், மாவட்ட தலைவர் எம். தேன்மொழி, மாவட்ட துணை தலைவர் தங்கராஜ், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே. சின்னுசாமி மற்றும் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அவர்களின் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கின்றனர்.