நாகர்கோவில், ஜூன் 5- கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில், நெல்லை வழியாக சென்னை எழும்பூருக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதே போல மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் என்ஜின் மாற்றம் செய்யப்பட்ட பிறகு புறப்பட்டு செல்லும். இதனால் சுமார் 40 நிமிடங்களில் இருந்து 50 நிமிடங்கள் வரை தாமதம் ஆகி வந்தது. எனவே நேரம் வீணாவதை தவிர்க்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இந்த நிலையில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் இனி நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வராமல் பைபாஸ் வழியாக அதாவது நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 40 நிமிடங்கள் வரை பயண நேரம் மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.