நாகர்கோவில், ஜூலை 11 - ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் அது தமிழ்நாட்டை வஞ்சிக்காமல் இருக்க வேண்டும் எனவும் தமிழகத்திற்கான உரிமையை தர வேண்டும் எனவும் ஜிஎஸ்டி மூலம் ஒன்றிய அரசுக்கு செலுத்தும் பணத்தில் தமிழகத்திற்கான பங்கை முழுமையாக தர வேண்டும் எனவும் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டத் திருத்தங்கள் காவல் துறை ஆட்சிக்கு வழி வகுக்கும் என்பதால், அதை திரும்பப் பெற்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும். உரிய திருத்தத்துடன் கொண்டு வருவது சரியாக இருக்கும். தற்போதைய நடவடிக்கையானது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதாக உள்ளது என்றார்.
பாஜக தலைவர்கள் மீதான குற்றப் பின்னணி தொடர்பாக ஆர்.எஸ். பாரதி கூறிய அதே கருத்தை தான் காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது. சமீப காலத்தில் ஏராளமான குற்றப் பின்னணி கொண்டவர்கள் பாஜக நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு இருப்பது அனைத்து தரப்பினருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் ஏன் அப்படிப்பட்ட நபர்களை நிர்வாகிகளாக நியமித்தார்கள் என விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் அமைச்சர்.
தற்போது நாட்டில் ஆறு சதவீதம் வேலைகள் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியிருப்பது குறித்து மனோதங்கராஜ் கருத்துக் கூறுகையில், ரிசர்வ் வங்கி அதன் தனித்தன்மையை இழந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது; பண மதிப்பிழப்பு நடவடிக்கையானது தீவிரவாதத்திற்கு செலவழிக்கும் பணத்தை தடுக்கும் எனவும் ஊழலை தடுக்கும் எனவும் கூறினார்கள்; தற்போது கூட மோடி மூன்றாம் முறையாக பிரதமராக பதவியேற்ற பின்பு நான்கு இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது, வேலையில்லா திண்டாட்டம் எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பது கிராமங்களுக்கு சென்றால் தெரிகிறது; ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு ஏமாற்று வேலை; கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வட மாநிலங்களில் தோல்வி அடைவதற்கு வேலையில்லா திண்டாட்டம் தான் காரணம் எனவும் கூறினார்.