நாகப்பட்டினம் மார்ச் 25. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியில் நகர்ப்புற 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதில் இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி கலந்துகொண்டார். கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்ட வந்த நிலையில், நகராட்சி, பேரூராட்சி போன்ற பகுதிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடடி வந்தது. மேலும் விவசாய தொழிலாளர் சங்கமும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியது. இதன் விளைவாக நகர்ப்புறங்களிலும் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும், கீழ்வேளூர் பேரூராட்சியில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்துவதற்கான தொடக்கவிழா கீழ்வேளூரில் நடைபெற்றது. இவ்விழாவில் இத்திட்டத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றவரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான வீ.பி.நாகை மாலி கலந்துகொண்டு பேசினார். காலநிலை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன், மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கௌதமன், நாகை மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்புராஜ், முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன், திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் ப.கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.