வேதாரண்யம், ஏப்.24- நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேட்டில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி அலுவலகம் பழுதடைந்ததால் அருகில் உள்ள நூலகத்தில் ஊராட்சி அலுவலகம் தற்காலிகமாக இயங்க தொடங்கியது. அன்று முதல் இன்று வரை கடந்த 5 ஆண்டுகளாக நூலகத்திலேயே ஊராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள், புத்தகம் வாசிப்பவர்கள் நூலகத்திற்கு வந்து செல்ல முடியாமல் உள்ளனர். நூலகத்தில் உள்ள புத்தகங்கள் அதே கட்டிடத்தின் ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஊராட்சி அலுவலகம் செயல்படும் நூலக கட்டிடம், மிகச்சிறிய கட்டிடம் என்பதால், தினமும் ஊராட்சி அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தங்கள் பணிகளை முடித்து செல்வதற்கு மிகவும் தாமதமாகிறது. எனவே உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து நூலக கட்டிடத்தில் இயங்கும் ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.