தேனி, பிப்.19- தேனி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வீடு வீடாகச் சென்று நிதி வசூல் செய்த போது ரூ.16 லட்சத்திற்கும் மேலாக நிதியை வழங்கி பொதுமக்கள் தங்கள் ஆதரவை கட்சிக்கு தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கட்சி வளர்ச்சி நிதிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக வீடு வீடாக சென்று நிதி வசூல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 31-ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் நிதி வசூல் செய்ய மாவட்டக் குழு திட்டமிட்டது. திட்டமிட்ட அடிப்படையில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி பங்கேற்று நிதி வசூலை தொடங்கி வைத்தார். மொத்தம் 30 நாட்களில் தேனி மாவட்ட வரலாற்றில் ரூ.16 லட்சத்திற்கும் மேலாக பொதுமக்கள் நிதி வழங்கியது இதுவே முதல் முறையாகும்.
வசூல் அனுபவத்தை தோழர்கள் பகிர்கிற போது, வீடு வீடாக நம் தலைவர்கள் செங்கொடி ஏந்தி நிதி வசூலுக்கு சென்றபோது பெண்களே பெரும்பாலும் வீடுகளில் இருந்தனர். அவர்களே பல வீடுகளில் ரூ.500-ஐ கட்சிக்கு வழங்கி விலைவாசி உயர்வு குறித்தும், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்தும், குடிநீர், கழிப்பிடம் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் சென்ற போது மனமுவந்து நிதி வழங்கியதோடு, உங்கள் கட்சியைத்தான் நாங்கள் நம்பிக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பட்டியலின மக்கள் வசிக்கிற பகுதிகளில் சென்ற போது, வரவேற்பு அளித்த மக்கள் எங்களிடம் அதிக நிதி கொடுக்க கூடிய நிலைமையில் இல்லை, எங்களால் ஆன நிதியை வழங்குவதாக நிதியை வழங்கி உற்சாகப்படுத்தினர்.
இயக்கத்தில் 510 குழுக்கள்
மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இயக்கத்தில் 510 குழுக்களாக சென்று நிதி வசூலில் ஈடுபட்டனர். இடைக்குழு உறுப்பினர்கள் 96 பேர் (83சதவீதம்) பங்கேற்றுள்ளனர். கிளைச் செயலாளர்களில் 129 பேர் (43 சதவீதம்) கலந்து கொண்டனர். கட்சி உறுப்பினர்களில் 544 பேர் கலந்து கொண்டனர்.
நிதி வசூல் இயக்கத்திற்கு 30 ஆயிரம் துண்டு பிரசுரம் அச்சிடப்பட்டு, சுமார் 40 ஆயிரம் கட்சித் தோழர்கள் வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்தனர். மார்க்சிஸ்ட் கட்சிக்கு மக்களின் பேராதரவு வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும். சின்னமனூர் ஏரியாக் குழுவில் ரூ.2,50,180, கம்பம் ஏரியாக் குழுவில் ரூ.2,15,000, பெரியகுளம் தாலுகாக் குழுவில் ரூ.2,35,000, போடி தாலுகாக் குழுவில் ரூ.2,13,000, ஆண்டிப்பட்டி ஒன்றியக் குழுவில் ரூ.2,02,769, தேனி தாலுகாக் குழுவில் ரூ.1,91,000, தேவாரம் ஏரியாக் குழுவில் ரூ.1,00,000, பாளையம் ஏரியாக் குழுவில் ரூ.96,000, கூடலூர் ஏரியாக் குழுவில் ரூ.79,680, கடமலைக்குண்டு ஒன்றியக் குழுவில் ரூ.44,830 என மொத்தம் ரூ.16,28,284 என வாரி வழங்கினர். கடந்தாண்டு ரூ.11 லட்சம் நிதி திரண்டது குறிப்பிடத்தக்கது.
மாநிலச் செயலாளரிடம் ஒப்படைப்பு
பொதுமக்கள் அள்ளித் தந்துள்ள ரூ.16,28,284 -ஐ கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை சனிக்கிழமையன்று தேனியில் நேரில் வழங்கினார். நிகழ்ச்சியின் போது, மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், சி.முருகன், எம்.ராமச்சந்திரன், டி.கண்ணன், ஜி.எம்.நாகராஜன், கே.எஸ்.ஆறுமுகம், கே.ஆர்.லெனின், இ.தர்மர், சி.முனீஸ்வரன், சு.வெண்மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.