districts

பொது விநியோகத் திட்டத்தை ஒரே துறையின் கீழ் கொண்டு வருக! கூட்டுறவு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

திருவாரூர், ஜூன் 27 - கூட்டுறவு ஊழியர் (சிஐடியு) சங்கத்தின் திருவாரூர் மாவட்ட பேரவை நா.பாலசுப்பிரமணியன் நினைவரங்கில் மாவட்டத் தலைவர் டி.முருகையன் தலைமையில் நடைபெற்றது. கூட்டுறவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எம்.சௌந்தராஜன் துவக்க உரையாற்றினார். சிஐடியு மாவட்ட தலைவர் இரா.மாலதி, மாவட்ட பொருளாளர் எஸ்.வைத்தியநாதன் மற்றும் தோழமை சங்கத்தினர் வாழ்த்திப் பேசினர்.  மாவட்டத் தலைவராக டி.முருகையன், செயல் தலைவராக வி.முருகானந்தம், பொது செயலாளராக எம்.செல்வராஜ், பொருளாளராக எஸ்.செல்வம், 4 துணைத் தலைவர்கள், 4 துணைச் செயலாளர்கள் மற்றும் 16 மாவட்டக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, கருணை ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்கிட வேண்டும். போனஸ் சட்ட விதி 1988 எண் 97-ல் போனஸ் சட்டத்திற்கு நிகரான தொகை வழங்கும் வகையில் திருத்தம் கொண்டு வர வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு நிகராக அமலாக்க வேண்டும். வருங்கால வைப்பு நிதியை வருங்கால வைப்பு நிதி பராமரிப்பு ஆணையத்தின் மூலம் பராமரிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பொது விநியோகத் திட்டத்தை ஒரே துறையின் கீழ் கொண்டுவர வேண்டும். பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அனைத்துப் பொருட்களும் உறைகளில் அடைத்துத் தரப்பட வேண்டும்.  நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்குவதில் உள்ள தேக்க நிலையை நீக்கி விரைந்து வழங்கிட வேண்டும். குடும்ப அட்டைகள் வகைப்படுத்தலை சீரமைக்க வேண்டும். பணி நிரந்தரம் செய்யப்படாத ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.