திருவாரூர், ஜூன் 24 - வழக்கத்தைவிட முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உற்சாகமாக விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது சில பிரதானமான வாய்க்கால்கள் தூர்வாரும் பணியும் முடிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாசனத்திற்காக அத்தகைய வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிட ஏற்ற வகையில் தலைப்பு வாய்க்கால் மதகுகள் சீரமைக்கப்படவில்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதனால் கதவணைகளை திறந்து மூடுவதற்கு விவசாயிகள் சிரமப்படுகின்றனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த வேலங்குடி பகுதிகளில் நாட்டாற்றிலிருந்து அகரமுகந்தனூர் ஏ-பிரிவு வாய்க்கால் கதவணை எண்:66 பிரிகிறது. இந்த கதவணை சரியாக பராமரிக்கப்படாமல் எந்நேரத்திலும் கீழே விழுந்து விடக்கூடிய அபாயத்தில் உள்ளது. மேலும் வாய்க்கால் தலைப்பிற்கான பொருத்தமான சாவிகள் இல்லாததால், ஆற்றில் தண்ணீர் இருந்தும் வாய்க்கால்களுக்கு திறந்துவிட முடியாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியக்குழு உறுப்பினருமான எஸ்.முனுசாமி தெரிவிக்கையில், “பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இதுபற்றி பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் அலட்சியமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாகவும், இதனால் பாசன நீர் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலையில் விவசாயிகள் இருப்பதாகவும் வேதனையுடன் கூறினார்.