திருவாரூர், மே 12- திருவாரூர் வட்டம் இலவங்கார்குடி ஊராட்சி பவித்திர மாணிக்கத்தில் செயல்பட்டு வருகிறது அரசு நடு நிலைப்பள்ளி. இப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் இரா.அபிஜித் என்ற மாணவன் வில்வித்தை போட்டியில் பங்கேற்க நேபாளம் செல்ல உள்ளார். இவரது பயணம் வெற்றிகரமாக அமையவும், போட்டியில் வெற்றிவாகை சூடவும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்க பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் குழுவின் தலைவர் என்.அம்பிகா தலைமை யில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக புலவர்.எண்கண் சா.மணி கலந்துகொண்டார். தலைமை ஆசிரியர் ஜெ.ஜெயந்தி பள்ளி வளர்ச்சிக்குரிய தேவைகள் குறித்துப் பேசினார். கூட்டத்தில், போதிய வகுப்பறைகள் இல்லாதததால் பெற்றோர்கள் பங்களிப்பில் தற்காலிக வகுப்பறைகள் அமைப்பது, மே-15ல் செய்யுள் மனனப்போட்டி வைத்து பரிசளிப்பது, பள்ளி வளாகத்தை சுற்றி தற்காலிக கம்பி வேலி அமைப்பது, மாணவர் அபிஜித்தின் வெளிநாட்டுப் பயணத்துக்கு தேவையான உதவிகளை செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.