திருவாரூர், ஜூலை 2 - திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு குடும்ப சூழல் காரணமாக படிப்பை தொடராமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு சென்ற இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நான்கு மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அப்பெண்ணிடம் விசாரித்தபோது, திருவாரூர் நகரத்துக்குட்பட்ட அழகிரி காலனியைச் சேர்ந்த விஜய்(22) என்ற இளைஞர், வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், அவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பழகி வந்ததும், அதனால் அவர் கர்ப்பமானதும் தெரியவந்தது. இது தொடர்பாக அருகிலுள்ள திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட விஜய் மீது புகாரளிக்கப்பட்டது. ஆனால் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறை இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. மேலும் விஜயிடம் விசாரித்துவிட்டு, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு மேலும் 4 பேரோடு தொடர்பு இருப்பதாக, குற்றவாளி விஜய் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி, காவல்துறையினர் இளம்பெண்ணிடம் தேவையற்ற கேள்விகளை எழுப்பி அடித்து மிரட்டியுள்ளனர். விஜயின் அம்மா தனது மகனைக் காப்பாற்ற, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் பணம் தருவதாக பேரம் பேசியுள்ளார்.
இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கவனத்துக்கு வந்திருக்கிறது. அவர்கள் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று விசாரித்தபோதும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதைத் தொடர்ந்து உடனடியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கோமதி, மாவட்ட தலைவர் சுமதி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி.ரகுராமன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், நகரச் செயலாளர் எம்.தர்மலிங்கம் உள்ளிட்ட தலைவர்களும் பொதுமக்களும், குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையை கண்டித்துப் பேசினர். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை தைரியமாக வெளியே சொல்வதே அரிதாக உள்ள சூழலில், பாதிக்கப்பட்ட பெண்ணையே காவல்துறை தாக்கிய இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.