திருவள்ளூர்,நவ 2- அம்மனேரி கூட்டுச் சாலை முதல் ஆதிவராகபுரம் வரை உள்ள சாலையை உடனடியாக சீரமைக்கப்படும் என அதிகாரிகள் எழுத்து பூர்வமாக உறுதியளித்தால் போராட்டம் கைவிடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி-ஆர்.கே.பேட்டை நெடுஞ்சாலையில் அம்மனேரி கூட்டுச் சாலை முதல் மடுவூர், ஆதிவராகபுரம் வரை 3.8 கி.மீ. தூரம் ஒன்றிய சாலை அமைந்துள்ளது. இந்த சாலை கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப்பட வில்லை. இதனால் நடந்து செல்ல கூட முடியாத நிலையில் மிகவும் சீரழிந்து கிடக்கிறது. இருசக்கர வாகனத்தில் கூட மருத்துவம் பார்ப்பதற்கு கூட செல்ல முடியாத அளவுக்கு குண்டும், குழியுமாக உள்ளது.பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அவதிக் குள்ளாகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் புதனன்று (நவ 2) அம்மனேரி கூட்டுச் சாலையிலிருந்து, ஆதிவராகபுரம் வரை உருளும் போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.தகவல் அறிந்து திருத்தணி கோட்டாட்சியர் ஹஜ்ரத் பேகம், ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் பசுபதி, மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர்கள் ரூபேஷ்குமார், ராஜேஸ்வரி வனத்துறை காவலர் சரவணன் ஆகியோர் வந்து தலைவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, சாலையை சீரமைத்து உடனடியாக பணிகள் துவக்கப்படும் என எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர். மேலும் 40 குடும்பங்களுக்கு குடிமனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க ப்பட்டு, மாவட்ட ஆட்சியர் பார்வையில் உள்ளதாகவும் விரைவில் பட்டா வழங்கப்படும் எனவும். புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைத்து தரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், மாவட்டப் பொருளாளர் சி.பெரு மாள், மாவட்ட துணைத் தலைவர் ஏ.அப்சல் அகமது, வட்டத் செயலாளர் வி.குப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத் தணி வட்டச் செயலாளர் வி.அந்தோணி, ஆர்.கே.பேட்டை வட்டச் செயலாளர் எஸ்.ரஜினி உட்பட பலர் கலந்து கொண்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் உருளும் போராட்டம் கைவிடப்பட்டது.