திருவள்ளூர், மார்ச் 8- முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததால் காமராஜர் துறைமுக ஒப்பந்த தொழி லாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் அனைவரும் பணிக்கு திரும்பினர். காமராஜர் துறைமுக வளாகத்திற்கு உட்பட்ட ஜே.எஸ்.டபிள்யூ.எண்ணூர் நிலக்கரி முனையத்தில் 160 ஒப்பந்த தொழி லாளர்கள் கடந்த 13 ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தங்களுடைய ஊதிய உயர்வு, சீருடை அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ், குளியல் சோப்பு, டவல் மற்றும் பாதுகாப்பு உப கரணங்கள் கேட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 2022 நவம்பரில் முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் தொழிலாளர் நல ஆணையர், தொழிற்சங்க தலைவர்கள், ஒப்பந்ததாரர் ஆகியோர் கலந்து கொண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தம் போடப்பட்டு ஒரு மாதத்தில் இதனை நிறைவேற்ற வேண்டும். ஆனால் இதுவரை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி புதனன்று (மார்ச் 8) வேலை நிறுத்த போராட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஆவடி சரக காவல்துறை ஆணையர் கலியன், ஒப்பந்ததாரர், தொழிற்சங்க தலைவர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் பணிக்கு திரும்பினர்.இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், மாவட்ட துணைச் செயலாளர் நரேஷ் குமார், மாவட்ட குழு உறுப்பினர் பாஸ்கர், கிளை நிர்வாகிகள் மெகபூப் ஷெரிப், ஏசுதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.