districts

img

ஓடைகளை அழித்துவிட்டு விளை நிலங்களை அழிக்கும் அவலம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வேங்கிக்கால் ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் கடந்து செல்வதற்காக குறிஞ்சி நகர் பகுதியில் உபரி நீர் ஒடைகள் இருந்தது. சமீப காலங்களில் அந்த மழைநீர் செல்லும் கால்வாய்கள் அழிக்கப்பட்டு, வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு குடியிருப்புகள் வந்து விட்டதால் மழைநீர் செல்ல வழி யில்லாமல் திருவண்ணாமலை - வேலூர் நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. வருவாய் துறையினர் உதவி யுடன் வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் நீர் வெளியேறும் கால்வாய்களும் அழிக்கப்பட்டதால் ஏரியைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழும் நிலை உள்ளது. இந்நிலையில் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் செல்ல வேலூர் பிரதான சாலையில் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் வேலூர் பிரதான சாலையிலிருந்து, குறிஞ்சி நகர் பகுதி வழியாக ஏரி உபரி நீர் செல்ல வழியில்லாததால், பழைய ஓடை பாதையை தொடர முடி யாமல், அருகில் உள்ள விளை நிலங்கள் வழியாக தண்ணீரை வெயியேற்றும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தியது. தங்கள் விளைநிலங்கள் வழியாக மழைநீரை கொண்டு செல்ல கால்வாய் அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வட்டாட்சியரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலம் காலமாக இருந்த ஏரிக்கால்வாய் ஓடைகளை அழித்து, வீட்டுமகைளாக விற்பனை செய்துவிட்டு, தற்போது விளை நிலங்களையும் காவு கேட்பது முறையற்ற செயல் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்யின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர் எம்.பிரகலநாதன், எஸ்.ராமதாஸ், விவசாயிகள் சங்க தலைவர்கள் எஸ்.பலராமன், பழனி, அசோக் உள்ளிட்ட நிர்வாகிகள் களத்திற்கு நேரில் சென்று பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளை சந்தித்து பேசினர். பின்னர் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் கால்வாய் இருந்த வழியிலேயே தண்ணீரை கொண்டு செல்ல வேண்டும் என வட்டாட்சியரிடம் வலியுறுத்தினர்.