உடுமலையில் பயிர்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் நடத்திய காத்திருப்பு போராட்டம் வெற்றி
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3184 விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடியில் விதிமீறல் நடைபெற்றிருந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனுக்கள் வழங்கினர். ஆனால் விவசாயிகளின் கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகமும் கூட்டுறவுத் துறையும் எந்த ஒரு முடிவும் எடுக்காத நிலையில் உடுமலை குட்டைதிடல் காந்தி சிலை சிலை முன்பு 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி ரசீது கிடைக்கும் வரை காத்திருந்து போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது :
உடுமலை மடத்துக்குளம் தாலுகாக்களில் 3000 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி வழங்காமல் விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் எந்த ஒரு விளக்கமும் தரப்படவில்லை மேலும் ஜனநாயக முறைப்படி காத்திருக்கும் போராட்டம் செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறை மூலம் ஒலிபெருக்கி வைக்க கூடாது, குடிநீர் வைக்ககூடாது உட்பட பல்வேறு இடர்பாடுகளை செய்து வருவதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறோம். ஆகையால் எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் பயிர் கடன் தள்ளுபடி ரசீது வழங்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என தெரிவித்தனர்.
விவசாய சங்க மாவட்ட தலைவர் எஸ். ஆர். மதுசூதனன், மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட துணை தலைவர் உடுக்கம்பாளையம் பரமசிவம், மற்றும் ஒன்றிய செயலாளர்கள் பாலதண்டபானி, ரங்கநாதன்,கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் ஸ்ரீதர், ராஜகோபால், ஜல்லிபட்டி கோபால் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து, கூட்டுறவு சங்க மாவட்ட இணை பதிவாளர் சீனிவாசன், வட்டாச்சியர் ராமலிங்கம் ஆகியோர் விவசாய சங்கத்தினரின் முன்னிலையில் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர் .இதனால் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் வெற்றி அடைந்துள்ளது.