உடுமலை அருகே பள்ளபாளையத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்ற நிலையில் மாற்று இடம் வழங்கக்கோரி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
தமிழக நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுவதையும் அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் நீர்நிலை புறம்போக்கில் 10 இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கீழ் உள்ள கீழ்பவானி வடிநிலக்கோட்டம், பவானிசாகர் அணைக்கோட்டம், மற்றும் உடுமலை திருமூர்த்தி அணைக்கோட்டம் ஆகியவற்றில் 10 இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதனடிப்படையில் ஆய்வு செய்த அதிகாரிகள் குழு, உடுமலை அருகே தென்பூதிநத்தம் பள்ளபாளையம் கிராமத்தில் உள்ள செங்குளத்திற்கு வரும் நீர்நிலைப் பாதையில் உள்ள 22 வீடுகள் மற்றும் இரண்டு கோவில்களை அகற்றும் பணி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.
வருவாய் கோட்டாட்சியர் கீதா தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் திருமூர்த்தி அணையின் மேற்பார்வை பொறியாளர், செயற்பொறியாளர், வட்டாட்சியர் கணேசன் , ஒன்றிய ஆணையாளர் ஷெல்டன், உள்ளிட்ட வருவாய்த்துறை, ஒன்றிய, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்காக உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேன்மொழி வேல் தலைமையில் 3 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் மாற்று இடம் வழங்க கோரி அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் காவல்துறையினர் தடியடியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.