ஆட்டோ தொழிலாளியை வெட்டிய இந்து முன்னணி பிரமுகர்களை கைது செய்யக்கோரி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவிநாசி ஒன்றியம் ஆட்டையம்பாளையத்தில், இந்து முன்னணி பிரமுகர்கள் அழகுபாண்டி மற்றும் அவரது நண்பர் ஆகியோர் ஆட்டோ தொழிலாளி கந்தசாமி மற்றும் தரணிஷ் ஆகியோரை ஞாயிறன்று அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து கந்தசாமி மற்றும் தரணிஷ் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளிகள் பலர் இந்து முன்னணி பிரமுகர் ஸ்ரீதர்,அழகுபாண்டி அவரது நண்பர் ஆகியோரை உடனே கைது செய்யக்கோரி கோவை செல்லும் சாலையை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பிரச்சனை குறித்து காவல்துறை அதிகாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதாக வாக்குறுதி அளித்த பின்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதனையடுத்து, திங்களன்று மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பவுல்ராஜை சந்தித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் ஆட்டோ தொழிலாளிகளை தாக்கியது சம்பந்தமாக புகார் மனு அளித்துள்ளனர்.