districts

img

தொழில் பூங்கா அமைக்க அளவீடு:பொதுக்கள் எதிர்ப்பு

சேவூர் அருகே நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தொழில் பூங்கா (சிப்காட்) மீண்டும் அமைப்பதற்காக திடிரென அளவீடு பணி மேற்கொள்ளப்பட்டதால், பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

 சேவூர் அருகே தத்தனூர் ஊராட்சிப் பகுதியில் 846 ஏக்கரில் தொழில் பூங்கா அமைப்பதற்கான பணி கடந்த 2020 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

இதையறிந்து தத்தனூர், புலிப்பார், புஞ்சை தாமரைக்குளம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் தொழில் பூங்கா அமைக்கப்பட்டால், விளை நிலங்கள், கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி ஆகியவை பாதிப்பு ஏற்படும்  எனக் கூறி தொடர்ந்து, மறியல், தர்ணா உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அப்போதைய அதிமுக அரசு, பொதுமக்களுக்கு எதிராக தொழில் பூங்கா அமைக்காது என உறுதியளித்து, தொழில் பூங்கா திட்டத்தை கைவிட்டது. ஏற்கனவே கடந்தமுறை பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுகவினர் தொழில் பூங்கா அமைக்கப்படாது என உறுதியளித்துள்ளனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தத்தனூர் பகுதியில் திடிரென மீண்டும் தொழில் பூங்கா அமைப்பதற்காக அலுவர்கள் ட்ரோன் கேமரா மூலம் அளவீடு பணி  மேற்கொண்டனர்.

இதையறிந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு, எதிர்ப்புத் தெரிவித்தனர். சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வருவாய்த்துறையினர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, அளவீடுபணி மேற்கொள்ள வந்த அலுவலர்கள், உயர் அலுவலர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.

இதில், உயர் அலுவலர்கள், தத்தனூர் ஏற்கனவே தொழில் பூங்கா அமைக்கும் பணி கைவிடப்பட்ட பகுதி எனத் தெரிவித்ததாகவும், பழைய பட்டியல்படி அளவீடு மேற்கொள்ள வந்து விட்டதாகவும் கூறி, அளவீடு பணியை நிறுத்தி அலுவலர்கள் திரும்பி சென்றனர்.