திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திங்களன்று சிறுத்தை தாக்கியதில் வேட்டைத்தடுப்புக் காவலர் ஒருவர் காயமடைந்தார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள பாப்பாங்குளத்தைச் சேர்ந்தவர் வரதராஜன்(63), மற்றும் அவருடன் கூலித்தொழிலாளி மாறன் (66) ஆகிய தோட்டத்தில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, இருவரையும் புலி பலமாகத் தாக்கியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த வரதராஜனையும், மாறனையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலின்பேரில் சேவூர் காவல்துறையினர் மற்றும் திருப்பூர் கோட்ட வனத்துறையினர் சிறுத்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், அமராவது வனக்கோட்டத்துக்கு உள்பட்ட வேட்டைத் தடுப்புக் காவலர் மணிகண்டன்(40) சோளக்காட்டுக்குள் சிறுத்தையைத் தேடும் பணியில் திங்களன்று மாலையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவரது மேல் பாய்ந்த சிறுத்தை மணிகண்டனின் வலது தொடையைக் கடித்துக் குதறியது. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சக ஊழியர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும்,சோளக்காட்டில் பதுங்கியுள்ள சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட வன ஊழியர்களும், 20க்கும் மேற்பட்ட காவலர்களும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக பாப்பாங்குளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.