districts

சாதிய ஆதிக்க வெறியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக: மாதர் சங்கம் வலியுறுத்தல்

“திருநெல்வேலியில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியருக்கு பாதுகாப்பு அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தை பெண்ணின் உறவினர்கள் மற்றும் சாதி ஆதிக்க வெறியர்கள் தாக்கி சூறையாடி உள்ளனர். அங்கு இருந்த மாதர் சங்க மாவட்டக்குழு உறுப்பினரும்  வழக்கறிஞருமான பழனி அவர்களை மிகக் கொடூரமாக தலை முடியை பிடித்து இழுத்து அடித்து கொலை வெறியோடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இது கண்டனத்திற்குரியது. திருநெல்வேலி மாவட்டத்தில் இது போன்ற    ஏராளமான சாதிய வன்கொடுமைகள் பல்வேறு வடிவங்களில் நிகழ்ந்து வருவது கவலை அளிப்பதாகும். பொதுவாக இச்சமூகத்தில் சாதியப் பிடிமானம் ஆழமாக வேரூன்றி இருப்பதும் சாதி மறுப்பு காதல் என்று சொன்னால் அதை வேரோடு வெட்டிச் சாய்ப்பது என்ற அடிப்படையில் படுகொலைகள் நிகழ்த்தப்படுவதும் கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்படுவதும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்  தீண்டாமைக்கொடுமைகளுக்கு எதிராக, தலித் பெண்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக தீண்டாமை கொடுமைகள் எந்தெந்த வடிவங்களில் இருக்கிறது என்பதை  ஆய்வுகள் மேற்கொண்டு அதற்கு எதிரான மாநாடுகளையும் போராட்டங்களையும் நடத்திய அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், பெண் விடுதலைக்கான போராட்டங்களை நடத்துவதுடன் இச்சமூகத்தில் புரையோடி உள்ள சாதிய மதப்பழமைவாத கருத்துக்களுக்கு எதிராக வலிமையான போராட்டங்களையும் தொடர்ந்து மக்கள் மத்தியில் கொண்டு செல்கிற பணியை மேற்கொண்டுள்ளது.   உடனடியாக தமிழக அரசு சாதி மறுப்பு திருமணங்கள் செய்யக்கூடிய தம்பதியர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை   மேற்கொள்ள வேண்டும். வேலை வாய்ப்பை  உத்தரவாதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். தாக்குதலுக்கு உள்ளான பழனிக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.பழனியை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணவப்படுகொலைக்கு எதிரான சிறப்புச் சட்டத்தை உடனே கொண்டு வர வேண்டும்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து...