districts

மதுரை முக்கிய செய்திகள்

நூறு நாள் வேலையில்  சாதியப் பாகுபாட்டை கைவிட சிபிஎம் வலியுறுத்தல்

நன்னிலம், ஜன. 12 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் பட்டியலின, தாழ்த்தப்பட்ட மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பான நூறு நாள்  வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நன்னிலம் ஒன்றி யத்தில் உள்ள 48 ஊராட்சி கிராமங்களிலும் நூறு நாள் வேலை செய்த பயனாளிகளில், சாதிய பாகுபாடு பார்த்து வேலை  வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து சாதியினரும் வேலை செய்த என்.எம்.ஆர் பதிவேட்டில் பட்டியலின மக்க ளுக்கு மட்டும் நூறு நாள் வேலைக்கான கூலி இதுவரை வழங்கப்படவில்லை. சாதிய பாகுபாடு பார்த்து சம்பளம் வழங்குவது கண்டிக்கத்தக்கது. இந்த போக்கை முற்றிலுமாக  கைவிட வேண்டும். பொங்கல் பண்டிகைக்குள் பட்டியலின மக்களுக்கு நூறு  நாள் சம்பள தொகையை உடனே வழங்க வேண்டும். இது போன்ற சாதிய பாகுபாடுகளை கைவிட வேண்டும். இல்லை யெனில் மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்  விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக நன்னிலம் ஒன்றிய  அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என  சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம் தெரிவித்துள் ளார்.

அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி

அரியலூர், ஜன.12 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் தழு தாழைமேடு கிராமத்தில் மாவட்டத்திற்குள்ளான விவசாயி கள் பயிற்சியில் பூச்சி மற்றும் நோயில் ஒருங்கிணைந்த பயிர்  மேலாண்மை குறித்த பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை அலுவலர் மகேந்திரவர்மன் தலைமை யேற்று, வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பூச்சி நோய்களை முதலில் இயற்கை முறை யில் எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும். அரசு கொடுக்கும் இடு பொருட்கள் தரமானவை. அதனை வாங்கி அனைவரும் பயன டையுமாறு கேட்டுக் கொண்டார். சோழன்மாதேவி கீரிடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் அசோக்குமார்,  கோடை உழவு செய்வ தன் அவசியம் குறித்தும், உளுந்து மற்றும் கடலையில் விதை  நேர்த்தி செய்வதால் விதைமூலம் பரவும் பூஞ்சாண நோயினை  கட்டுப்படுத்தலாம். இனக் கவர்ச்சிப்பொறி, ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம் தீமை செய்யும் பூச்சிகளை இயற்கை முறை யில் கட்டுப்படுத்தலாம்.  மேலும் மண்வள அட்டையின் அவசியம் மற்றும் பஞ்சகாவியா  தயாரிப்பு முறைகள் குறித்தும் விளக்கி கூறினார். முன்ன தாக உதவி தொழில் நுட்பமேலாளர் உஷா வரவேற்றார். நிகழ்ச்சியில் தழுதாழைமேடு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள்  கலந்து கொண்டனர்.

சுதந்திர தின விழா போட்டிகள்: 10 வயதிற்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, ஜன.12 - இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் போட்டி களில் 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.  இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரி விக்கையில், 75 ஆம் ஆண்டு சுதந்திர தின பவள விழா ஆண்டின்  கொண்டாட்டத்தின் ஒரு அங்க மாக தாலுகா தொடங்கி மாநிலம் மு ழுவதும் 10 வயதுக்கு மேற்பட்ட  இந்திய குடிமக்கள் பல்வேறு  போட்டிகளில் பங்குபெற விண்ணப் பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது சம்மந்தமான விவரங்கள் https://amritmahotsav.nic.in. competitions.htm என்ற இணைய தளத்தில் உள்ளன. தங்களது படைப்புகளை ஒளிப்பட வடிவில் (Photo copy) மேற்கண்ட இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.  தாலுகா அளவிலான போட்டி கள் 31.1.2022 வரையும், மாவட்ட அளவிலான போட்டிகள் 15.2.2022 முதல் 28.2.2022 வரையும், மாநில அளவிலான போட்டிகள் 10.3.2022 முதல் 31.3.2022 வரையும், இறுதி யாக தேசிய அளவிலான போட்டி கள் 13.4.2022 அன்றும் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுப வர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப் படும்.  மேலும், இது தொடர்பான விவ ரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாக  முதல் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவல கத்தை நேரிலோ அல்லது தொலை பேசி வாயிலாகவோ 04322-299 382 தொடர்பு கொண்டு விவரங் களை அறியலாம்.

பாதை அடைத்துள்ள  டிரான்ஸ்பார்மரை அகற்ற கோரி சிபிஎம் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜன.12 - திருச்சி மாநகராட்சிக்குட் பட்ட காட்டூர் பாரத் அவன்யூவிலிருந்து அண்ணாநகர் செல்லும் 20 அடி பொதுப் பாதையை அடைத்து 10 அடி  அளவில் வைத்துள்ள டிரான்ஸ்பார்மரை அகற்ற வேண்டும். தெற்கு காட்டூர் பிலோமினாள்புரம் மூன்றாம் தெருவில் சாலையின் குறுக்கே உள்ள ஸ்டே கம்பியை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் காட்டூர் கிளைகள் சார்பில் செவ்வாயன்று காட்டூர் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மரிய ராஜ் தலைமை வகித்தார். போராட்டத்தை சிபிஎம் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா துவக்கி வைத்தார். போராட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால், கனல் கண்ணன் மணிமாறன், சார்லஸ் ஆகியோர் பேசினர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் டிரான்ஸ்பார்மரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

தியாகராஜ ஆராதனை விழா ஜன.22 ஒருநாள் மட்டும் நடக்கும்

தஞ்சாவூர், ஜன.12 - திருவையாறு ஸ்ரீ தியாக ப்ரம்ம மகோத்சவ சபா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:  “சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 175  ஆவது வருட ஆராதனை விழாவினை, விழாக்  குழுவினர், ஜன.18 ஆம் தேதி முதல் 22 ஆம்  தேதி வரை ஐந்து நாட்கள் சிறப்பாக நடத்து வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து வந்தனர்.  எனினும் கொரோனா மற்றும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் தொற்று நோயை கருத்தில் கொண்டும், விழாவில் கலந்து கொள்ளும் இசைக்கலைஞர்கள், ரசி கர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவ ரின் நலனை உறுதி செய்யும் வகையிலும், விழா ஏற்பாடுகள் சபையின் தலைவரால் விழாக் குழுவினருடன் கலந்து ஆலோசித்து மறுபரி சீலனை செய்யப்பட்டது.  ஒன்றிய-மாநில அரசுகளின் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கருத்தில் கொண்டும், தஞ்சை மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளின்படியும் இவ்வருட ஆரா தனை விழாவினை சத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் முக்தியடைந்த பகுள பஞ்சமி  தினமான ஜனவரி 22 ஆம் தேதி (சனிக் கிழமை) ஒரு நாள் மட்டும் நடத்துவதாக முடிவு  செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 18 ஆம் தேதி  முதல் 21 ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்ட  அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப் படுகிறது. ஜனவரி 22 ஆம் தேதி காலை வழக்கம் போல் உஞ்சவிருத்தியும், பின்னர் விழாப்பந்த லில் நாதஸ்வர கச்சேரியும், அதன் பின்னர்  சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிக்கு அபிஷே கம், ஆராதனை மற்றும் தனிமனித இடை வெளியுடன் குறைந்த அளவிலான இசைக் கலைஞர்களை கொண்டு பஞ்சரத்தின கீர்த்த னையுடன் கூடிய இசை அஞ்சலியுடன் இவ்வருட ஆராதனை விழா நிறைவு பெறும்.  மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோ ளின்படி விழா பந்தலுக்குள் 100 நபருக்கு மேல்  அனுமதியில்லை என்பதால் விழாவின் போது பந்தலுக்குள் பொதுமக்களுக்கு அனுமதி யில்லை என விழா குழுவினர் சார்பில் தெரி விக்கப்படுகிறது. இவ்விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் 2 தடுப்பூசி செலுத்திக்  கொண்டதற்கான சான்றிதழை கொண்டு வர  வேண்டும்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிபிஎம் மூத்த தோழர்  கே.பி.பிச்சயன் நினைவு நாள்  கொடியேற்று நிகழ்ச்சி

வேதாரண்யம், ஜன.12 - நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த  வடக்கு ஒன்றியம் வடமழை மணக்காட்டைச் சேர்ந்த கட்சி யின் மூத்த உறுப்பினர் மறைந்த தோழர் கே.பி.பிச்சயன் 33  ஆவது நினைவு நினைவு நாள் கொடியேற்றப்பட்டது.  கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவை சுப்பிர மணியன் கொடியேற்றி வைத்தார். ஒன்றிய செயலாளர் வெற்றியழகன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.எஸ்.பன்னீர்செல்வம்,  ஒன்றிய குழு உறுப்பினர்கள் டி.டி.சூரிய மூர்த்தி, எஸ்.முருகையன், பாலசுப்பிரமணியன், கிளை செய லாளர் திருச்செல்வம், கோமதி தங்கராசு, கட்சி உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  இதயம், சிறுநீரக சிகிச்சை பிரிவுகளை  துவங்க வேண்டும்: ஆட்சியரிடம் சிபிஎம் மனு

திருவாரூர், ஜன.12 -  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத் துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை  வசதிகளை தரம் உயர்த்த வேண்டும். உயிர்காக்கும் இருதயம் மற்றும் சிறுநீரக  சிகிச்சை பிரிவுகளை துவங்க வேண்டுமென வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சிய ரிடம் புதன்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு அளித்துள்ளது.  மேலும் அந்த மனுவில், விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும். 2006-2011 ஆம் ஆண்டு நடை பெற்ற கலைஞர் தலைமையிலான திமுக  அரசு முத்துப்பேட்டையை தனி வட்டமாக அறி வித்து ஆரம்ப கட்ட பணிகளை துவக்கி யது. ஆட்சி மாற்றத்தின் விளைவாக அந்த அறி விப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே தற்போதைய அரசு முத்துப்பேட்டையை தனி  வட்டமாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும். வலங்கைமானில் பேருந்து நிலை யம் அமைக்க வேண்டும்.  குடவாசலில் உள்ள அரசு கலைக் கல்லூ ரியை நிரந்தர புதிய கட்டிடத்தில் குடவாசல் பகுதியிலேயே செயல்பட நடவடிக்கை எடுக்க  வேண்டும். கொரடாச்சேரி பேரூராட்சி பகுதி யில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை  மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர் களை நியமித்து உள்நோயாளிகள் பிரிவுடன்  சிறு மருத்துவமனையாக செயல்பட நடவ டிக்கை எடுக்க வேண்டும்.  திருவாரூரில் பழுதடைந்துள்ள கமலா லய குளக்கரையை சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். தொடர் மழை யின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு பயிர் இழப்பீடாக ஒரு ஏக்கருக்கு ரூ.30  ஆயிரம் ரூபாயும், விவசாய தொழிலாளர்க ளுக்கு வாழ்வாதார நிதியாக 10 ஆயிரம் ரூபா யும் வழங்க வேண்டும்.  வசிப்பதற்கு ஏற்ற நிலையில் இல்லாத தொகுப்பு வீடுகள், காலனி வீடுகள் ஆகிய வற்றை சிறப்பு நிதி ஒதுக்கி செப்பனிட்டு தர  வேண்டும். திருத்துறைப்பூண்டியில் உள்ள  சுதந்திரப் போராட்ட தியாகி பி.சீனிவாச ராவ் நினைவிடத்தையும், மணி மண்டபத்தை யும் சீர் செய்து, பூங்காக்கள் அமைத்து பரா மரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  சிபிஎம் மாவட்ட செயலாளர் டி.சுந்தர மூர்த்தி மனுவினை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினார். மாவட் டக் குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா, குட வாசல் ஒன்றியக்குழு உறுப்பினர் டி.ஜி.சேகர்  ஆகியோர் உடனிருந்தனர்.

ஜன.15, 18, 26 தேதிகளில் மதுக்கடைக்கு அரசு விடுமுறை

தஞ்சாவூர், ஜன.12- தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும், அரசு டாஸ்மாக்  சில்லறை விற்பனை மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற விடுதி களுடன் இணைந்த மதுக்கூடங்கள் ஆகியவை ஜன.15 (சனிக்கிழமை) திருவள்ளுவர் தினத்தன்றும், ஜன.18 (செவ்வாய்க்கிழமை) வடலூர் இராமலிங்கனார் நினைவு  தினத்தன்றும், ஜன.26 (புதன்கிழமை) குடியரசு தினத்தன் றும், மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட மாட்டாது  என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத் துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

திருச்சிற்றம்பலம் அரசுப் பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

தஞ்சாவூர், ஜன.12 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா திருச்சிற் றம்பலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை  கல்வி அலுவலர் சிவக்குமார் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.  ஆய்வின்போது 10, 11, 12 ஆம் வகுப்புகளில் கொரோனா  தடுப்பு நடைமுறை விதிகள் முழுமையாக கடைப்பிடிக்கப் படு கின்றனவா என ஆய்வு செய்தார். மாணவர்கள், ஆசிரி யர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சானிடை சர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். பள்ளிக்கு  மாணவர்கள் வரும் போது காய்ச்சல் கண்டறியும் கருவி  மூலம் பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தலைமையாசிரிடம் கேட்ட றிந்தார். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாணவர்களிடையே பேசினார். ஆய்வின்போது பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவ லர் திராவிடச் செல்வம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி, தலைமை ஆசிரியர் (பொ) அந்தோணிசாமி மற்றும்  ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் போராட்டம்

முசிறி, ஜன.12 - திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழி யர்கள் செவ்வாயன்று திடீரென ஒருநாள் விடுப்பு போராட் டம் நடத்தினர். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி, முன்னாள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியனின் தற்காலிக பணி நீக்க ஆணையை ரத்து செய்து, பணி ஓய்வு உத்தரவு வழங்கிட கோரி மண்டல அளவி லான தர்ணா போராட்டம் அறிவித்திருந்தனர். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக,  மாநில அளவிலான ஒருநாள் விடுப்பு போராட்டமாக மாற்றப் பட்டு அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 14  ஊராட்சி ஒன்றியங்களில் இருந்தும், ஆயிரத்துக்கு மேற்பட் டோர் ஒரே நாளில் விடுப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட னர். 

ஆக்கிரமிப்பு அகற்றம்

தஞ்சாவூர், ஜன.12 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம், பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட ஆதனூர் கிராமத்தில் புல எண் :215,  216 ஆகிய புலன்களில், 1.01.0 ஹெக்டேர் பரப்பு இடம் ஆக்கிர மணம் செய்யப்பட்டு தனியார் வசம் இருந்தது. இந்நிலை யில், பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமார் தலைமையில், வரு வாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உத வியாளர்கள், நில அளவையர்கள், அளவீடு செய்யப்பட்ட இடத்தில், காவல்துறை பாதுகாப்புடன், ஹிட்டாச்சி இயந்தி ரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றி இடத்தை மீட்டனர். 

கால்நடை மருத்துவ, சுகாதார விழிப்புணர்வு முகாம்

பாபநாசம், ஜன.12 - பாபநாசம் அருகே அம்மாபேட்டையை அடுத்த கத்திரி நத்தத்தில் கால்நடை பராமரிப்புதுறை சார்பில் கால்நடை மருத்துவம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது.  முகாமிற்கு  அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர்  கே.வீ.கலைச்செல்வன் தலைமை வகித்தார். கால்நடை உதவி  இயக்குனர் கண்ணன் முன்னிலை வகித்தார். முகாமில் மாவட்ட  பஞ்சாயத்து தலைவர் கே.முத்துசெல்வன் கால்நடை களுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்து சிறந்த கால் நடைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.  முகாமில் கால்நடைகளை பராமரிப்பது, கால்நடைகளை தாக்கும் நோய் குறித்தும், அதற்கான உடனடி சிகிச்சை குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. இதில் கத்திரி நத்தம், அதைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும்  மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கத்திரிநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் அய்யாபிள்ளை, துணை  தலைவர் வனமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் மகாராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வி.தொ.ச பேரவை 

வேதாரண்யம், ஜன.12 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேதாரண்யம் வடக்கு  ஒன்றியம் மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பில் வேதாரண்யம் தியாகி இரணியன் நினைவாக கட்சி அலுவலகத்தில் விவசா யத் தொழிலாளர் சங்க ஒன்றிய பேரவை கூட்டம் நடை பெற்றது.  சங்கத்தின் வேதாரண்யம் வடக்கு ஒன்றியச் செயலாள ராக எஸ்.அம்பிகாபதி, ஒன்றியத் தலைவராக எம்.பாலசுப்பிர மணியன், ஒன்றியப் பொருளாளராக ஆர்.கண்ணன் மற்றும் 9  பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது. வேதா ரண்யம் தெற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத் தின் ஒன்றியச் செயலாளராக வி.இளையபெருமாள், தலைவ ராக டி.கல்யாணசுந்தரம், பொருளாளராக எம்.சோழராஜன் மற்றும் 9 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப் பட்டது.

தஞ்சாவூர் ஆமை வேகத்தில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் கூடுதல் தலைமை செயலாளர் அதிருப்தி

தஞ்சாவூர், ஜன.12 - தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி பணிகளில், தற்போது வரை பாதி அளவிலான பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது என கூடுதல் தலைமை செயலர் சிவதாஸ் மீனா தெரிவித்தார். தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆகியோர் பழைய ஆட்சியர் அலுவலகம், புதிய பேருந்து நிலையம் பல்நோக்கு அரங்கம், ராஜப்பா பூங்கா மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், சிவதாஸ் மீனா செய்தியாளர்களிடம் கூறுகையில், திட்ட பணிகள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரை பாதி அளவிலான பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. மாதம் ஒன்றுக்கு 30 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும். ஆனால், குறைவாகத்தான் செலவு செய்யப்படுகிறது. விரைவில் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் கழிவறை மிகவும் மோசமாக பராமரிக்கப்படுகிறது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். ஆய்வின் போது, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாநகராட்சி ஆணையர் சரவணக் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டு நடக்கும் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேட்டி

புதுக்கோட்டை, ஜன.12 - புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன் விடுதியில் மாற்றுத் தேதியில் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடைபெறும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரி வித்துள்ளார்.   புதுக்கோட்டையில் புதன்கிழமை செய்தி யாளர்களிடம் அவர் பேசுகையில், முழு ஊர டங்கு உத்தரவின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன்விடுதியில் ஜன.16 ஆம்  தேதி நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டியை மாற்று தேதியில் நடத்த முதல மைச்சர் நிச்சயம் அனுமதி அளிப்பார். அதன்படி இந்த ஆண்டு கண்டிப்பாக வன்னி யன்விடுதி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி  நடைபெறும். தச்சங்குறிச்சி கிராமத்தில் உரிய பாது காப்பு நெறிமுறைகளோடு வியாழனன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதற்கு அனுமதி அளித்த முதலமைச்சருக்கு மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.