districts

img

படுமோசமான நிலையில் உள்ள சாலை சீரமைக்கப்படுமா?

தஞ்சாவூர், செப்.24 -  படுமோசமான நிலையில் உள்ள சாலையை உடனடியாக  சீரமைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மரக்காவலசை ஊராட்சியில், உடையநாட்டில் இருந்து மரக்கா வலசை பள்ளி செல்லும் வழியில் சாலை ஒன்று உள்ளது. பங்களா சாலை என அழைக்கப்படும் இச்சாலை, பல ஆண்டு களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த தார்ச் சாலை  சேதமடைந்து, நடந்து செல்லவே முடியாத வகையில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக உள்ளது. மேலும், சாலையின் பல இடங்களில் பெரும் பள்ளம் உள்ளது.  சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலையை பயன் படுத்தித்தான், இப்பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மரக்காவலசை நியாய விலை கடைக்கும், பஞ்சாயத்து அலுவலகத்திற்கும், பேருந்து பயணம் செல்ல வும் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்த சாலை படுமோசமான நிலையில் சேதமடைந்து காணப்படுவதால், இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கடும்  அவதிப்படுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் நிகழ் கின்றன. எனவே, இப்பகுதி மக்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, உடனடியாக போர்க்கால அடிப்படையில் தார்ச் சாலை அமைத்து தர வேண்டும். இல்லையெனில், இப்பகுதி  மக்களைத் திரட்டி, அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி தெரிவித்து உள்ளார்.