districts

img

வீரசோழன் ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள்: நோய் தொற்று பரவும் அபாயம்

மயிலாடுதுறை, பிப்.16-  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் இலுப்பூர் சங்கரன்பந்தல் முதல் பூதனூர் வளைவு வரை வீரசோழன் ஆற்றில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.  உத்திரங்குடி ஊராட்சி சங்கரன்பந்தல் கடைவீதியில், மளிகைக் கடை, காய்கறி கள் கடை, மீன், இறைச்சி கடைகள், உணவு  விடுதிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட  கடைகள் இயங்கி வருகின்றன.  இந்நிலையில் சங்கரன்பந்தல் பேருந்து நிலையம் அருகில் செல்லும் வீரசோழன் ஆற்றில், கடைகளில் இருந்து குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை மூட்டை மூட்டையாக இரவு நேரங்களில் வீசி வருகின்றனர். இதனால், ஆற்றில் வீசப்படும்  இறைச்சி கழிவு மூட்டைகள் தண்ணீரில் மிதந்து கொசுக்கள் சூழ்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், பொதுத்தேர்வு எழுத தயாராகி வரும் மாணவர்கள் இதனால் சிரமப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனை, பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர்.  அதேபோன்று, இலுப்பூர் ஊராட்சி குட்பட்ட முனிவலங்குடி முக்கூட்டு முதல்  பூதனூர் வளைவு வரை வீரசோழன் ஆற்றின்  ஓரம் மூட்டை மூட்டையாக குவிந்துகிடக்கும் பல்வேறு கழிவுகளால் அப்பகுதியை கடந்து செல்பவர்கள் மூக்கைப்பிடித்தவாறே கடக்க வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.