தஞ்சாவூர், ஜன.20- இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலி பரப்பு அமைச்சகம், தஞ்சாவூர் மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் பட்டுக் கோட்டை நகராட்சி ஒன்றியம் இணைந்து, கொரோனா நோய் தடுப்பு, தடுப்பூசி, தூய்மை இந்தியா இயக்கம், 75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் தேசிய வாக்காளர் தின ஒருங்கிணைந்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை அடுத்த ஆலடிக்குமுளை ஊராட்சி, தங்கம் திருமண மண்டபத்தில் வியாழனன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியப் பெருந்தலைவர் டி.பழனிவேல் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் சூர்யா புகழேந்தி முன்னிலை வகித்தார். கள விளம்பர உதவியாளர் எஸ்.அருண்குமார் வரவேற்றார். மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் டி.ரமேஷ்குமார், மாவட்ட உதவி சுற்றுலா அலுவலர் டி.பாபு, வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.பாலமுரளி, டாக்டர் சாய் பாலாஜி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என்.சுதா (வ.ஊ), கை.கோவிந்தராஜன் (கி.ஊ) ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஊராட்சி செயலர் கே.மணிகண்டன் நன்றி கூறினார். கூட்டத்தில், கொரோனா பெருந் தொற்று மூன்றாவது அலையை தடுப்பது குறித்தும், வாக்காளர்கள் கடமை, உரிமை, வாக்காளராக பதிவு செய்வதன் அவசியம் குறித்து கருத்துரை வழங்கப் பட்டது. விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.