சீர்காழி, ஜன. 21 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புளியந்துறை கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் 600-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் இந்த கடையின் மூலம்தான் வாங்கி செல்கின்றனர். இந்த கடையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் இருப்பு வைக்கப்பட்டு நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ரேசன் கடை கட்டிடம் கட்டப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிவிட்டதால், கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் கூரையின் உள்பகுதியில் கசிந்து அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் சேதமடைகின்றன. இக்கட்டிடத்தின் மேற்கூரை பகுதியில் பிளாஸ்டிக் தாள் கொண்டு மூடப்பட்டுள்ளது. எனவே புளியந்துறை கிராம மக்களின் நலன் கருதி, இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த ரேசன் கடை கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.