திருச்சிராப்பள்ளி, ஜன.28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா மாநகர காவல்துறை ஆணையருக்கு அனுப்பி உள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருச்சி மாநகரில் இரண்டு, நான்கு சக்கர மற்றும் சரக்கு வாகனங்களுக்கு இலக்கு தீர்மானித்து தலைக்கவசம், முகக்கவசம், நோ பார்கிங், வாகன விதிமீறல் என வாகன ஓட்டிகளுக்கே தெரியாமல், தெரிவிக்காமல் தானியங்கி கேமரா மூலம் வாகனங்களை படமெடுப்பதும் பிறகு மொத்தமாக வாகன எண்னை வைத்து அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கும் செயல் ஏற்புடையதில்லை. மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் வருமானம் இழந்தும் பெட்ரோல், டீசல், உதிரிபாகம், இன்சூரன்ஸ் கட்டணம் உயர்ந்தும் அவதிப்பட்டு வரும் ஏழை மக்கள் மீது காவல்துறையின் நெருக்கடி பொதுமக்களை துன்புறுத்தும் செயலாகும். சரக்கு வாகனம், வாடகை கார், ஆட்டோ, இருசக்கர வாகனம், பல்வேறு நிறுவனத்தில் பணியாற்றும் முகவர்கள், ஊழியர்களின் வருமானத்தில் ஒரு பகுதியை தட்டிபறிப்பது எந்த விதத்திலும் ஏற்புடையதில்லை. திருச்சி மாநகர காவல்துறை ஆன்-லைன் அபராத முறையை உடனே நிறுத்த வேண்டும். இதுவரை போடப்பட்ட அனைத்து ஆன்-லைன் அபராதத்தையும் ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களை திரட்டி பெரும் போராட்டத்தை நடத்தும் என தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.