திருச்சிராப்பள்ளி, மார்ச் 11- ஆண்டுதோறும் மார்ச் 10 ஆம் தேதி உலக சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை சார்பில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு உடல் உறுப்பு தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை திருச்சி கோட்டை காவல் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன், கோட்டை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மதிவாணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று உடல் உறுப்புதான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறுநீரக சிறப்பு மருத்துவர் மற்றும் மாற்று சிறுநீரக மருத்துவ நிபுணர் எஸ்.கணேஷ் அரவிந்த், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் என்.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பேரணி மருத்துவமனை முன்பு தொடங்கி சிந்தாமணி பஜார், சத்திரம் பேருந்து நிலையம், கரூர் பைபாஸ் ரோடு, காமராஜர் சிலை ரவுண்டானா, அண்ணாசிலை வழியாக சென்று மீண்டும் மருத்துவமனை வந்தடைந்தது. பேரணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரணியின் போது உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் பொது மருத்துவம் மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர் எஸ்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் 24 மணி நேரமும் சிறுநீரக நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் ஏற்படும் அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் ஒரே இடத்தில் சிகிக்சையும், தேவைப்பட்டால் அதற்கான அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. சிசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. சிறுநீரக தொற்றில் இருந்து மேலும் சிறுநீரகம் செயல் இழப்பு ஏற்பட்டாலும், சிறுநீரக அறுவை சிகிச்சைகள், சிறுநீரகமாற்று அறுவை சிகிச்சை மிகவும் சிறந்த முறையில் இந்த பகுதியில் செய்து வருகிறோம். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் நமது மருத்துவமனையில் ஏராளமானோருக்கு செய்து வருகிறோம். இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிறைய பேர் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உறுப்புகள் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். சுமார் 10 முதல் 12 வருடங்களாக காத்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு எல்லாம் சிறுநீரகம் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தியுள்ளோம்” என்றார்.