districts

குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரிடம் இன்று அங்கன்வாடி மைய செல்போன்களை ஒப்படைக்கும் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜுன் 28 - தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள மாரிஸ் அவின்யு கட்டிடத்தில் திங்களன்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சித்ரா மாநில செயற்குழு முடிவுகளை விளக்கி பேசினார்.  மாநில செயற்குழு முடிவின்படி, மாவட்டத்தில் அந்தந்த வட்டாரங்களில் இருக்கக் கூடிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் முன்னிலையில் தரம் குறைவான, பழுதான அங்கன்வாடி மைய கைபேசிகளை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரிடம் புதன்கிழமை (ஜூன் 29) ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவது. காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 3 வருடம் பணி முடித்த மினி அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.  ஏற்கனவே மினி மையத்தில் இருந்து மெயின் மையத்திற்கு பதவி உயர்வில் சென்ற ஊழியர்களுக்கு 10 ஆண்டுக்கான ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 30 ஆம் தேதி சென்னை தரமணியில் உள்ள இயக்குநர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் துணைத் தலைவர்கள், மாவட்ட இணைச் செயலாளர்கள் மற்றும் வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

;