திருவாரூர், ஜன.20 - திருவாரூரில் நடைபெறும் 2 ஆவது புத்தக திருவிழா இலச்சினையை (லோகா), திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில், ஆட்சியர் தி.சாருஸ்ரீ வெளியிட்டார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சி.ப்ரியங்கா உடனிருந்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், “திருவாரூர் மாவட்டத்தில் பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை 10 நாட்கள் திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ்.எஸ்.நகரில் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. தற்போது வெளியிடப்பட்ட இலச்சினை நமது மாவட்டத்தின் சிறப்பை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ஆழித்தேர், விவசாயத்தை குறிக்கும் நெற்கதிர், பறவைகள் சரணாலயத்தை குறிக்கும் பறவை, நமது மாவட்டத்தின் தமிழ் சான்றோர்களை குறிக்கும் புத்தகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இலச்சினை நமது மாவட்டத்தை சார்ந்தவரே வடிவமைத்துள்ளார். அனைவரும் புத்தக திருவிழாவில் பங்கேற்க வேண்டும்” என்றார்.