districts

img

முகம் சுளிக்க வைக்கும் திருக்கடையூர் திரும்பும் திசை எங்கும் குப்பை கழிவுகள்; திறந்து கிடக்கும் கழிவுநீர் வாய்க்கால்கள்

மயிலாடுதுறை, பிப்.7 - அடிப்படை வசதிகள் இல்லை; திரும்பும் திசை எல்லாம் குப்பை கழிவுகள்; திறந்து கிடக்கும் கழிவுநீர் வாய்க்கால் என சுகாதார சீர்கேட்டுடன் காட்சியளிக்கிறது புகழ்பெற்ற திருக்கடையூர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வந்து செல்லும் மக்கள். முகம் சுளித்தவாறே திரும்பி செல்லும் அவலநிலை நீடித்த வண்ணம் உள்ளது. புகழ்பெற்ற வழிபாட்டு தலங்கள் உள்ள ஊர்களில் திருக்கடையூரும் ஒன்று. இங்குள்ள அமிர்தகடேஷ்வரர் (அபிராமி கோவில்) ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்யவும் 60 ஆவது, 80 ஆவது, 90 ஆவது கல்யாணம் செய்வதற்கும், ஆயுள் அதிகரிக்க ஹோமங்கள் செய்யவும் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்து செல்கின்றனர். பல கோடி ரூபாய் வருவாய் உள்ள கோயில்களில் இக்கோயிலும் ஒன்று.  ஆனால் திருக்கடையூர் நகர் முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, ஆங்காங்கே குப்பை மேடுகளாக உள்ளன. மழைநீர் வடிகாலாக அமைக்கப்பட்டு தற்போது சாக்கடை வடியும் வடிகாலாக மாறிய வாய்காலில் மூடிகள் உடைந்து அதிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதியுறுகின்றனர். மேலும் கொசுக்கள் அதிகமாகி தொற்று நோய் ஏற்படும் அபாயமும் அச்சமுற செய்கிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.பரமசிவம் கூறுகையில், “திருக்கடையூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லாததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக கோயில் உள்ள நகர் பகுதி முழுவதும் கழிவுகளின் கூடாரமாக மாறி வருகிறது. பல கிராமங்களின் நீர் ஆதாரமாக விளங்கிய பழமையான ஆணைக்குளம் கழிவுகள் மிதக்கும் குளமாக மாறிவிட்டது. கோயில் யானை குளித்து வந்த குளத்தில் தற்போது பன்றிகள் குளிக்கிறது. சுற்றுப்பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் எல்லாம் ஆணைக்குளத்திலும் அதன் கரையிலும் கொட்டப்பட்டு வருகிறது. பேருந்து நிறுத்தம் மற்றும் அங்காடி கடை முன்பும், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய பகுதிகளில் சாக்கடை வடிகால் வாய்க்கால் திறந்தே கிடப்பதால் பலரும் விழுந்து விபத்துக்குள்ளாவதும் வாடிக்கையாகி வருகிறது. கோயிலின் எதிர்புறம் உள்ள குடிநீர் தொட்டி பழுதடைந்து கடந்த பல மாதங்களாக கேட்பாரற்று கிடப்பதால் குடிநீருக்காக பலர் அல்லல்படும் காட்சிகளை தொடர்ந்து காணமுடிகிறது.  அதேபோன்று மெயின் ரோட்டிலிருந்து கோயிலுக்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்தே கிடக்கிறது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டிய ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் கண்டு கொள்ளாமலேயே இருக்கிறது.

பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் கோவில் நிர்வாகமும் பக்தர்களின் வசதிக்காக எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்யாமல் இருக்கிறது.  பல கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கோயிலை புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வரும் இக்காலக் கட்டத்திலேயே பக்தர்களுக்கு தேவையான அடிப்படையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சாலை ஆகியவற்றை கோயில் நிர்வாகம் செய்வதோடு ஆணைக்குளத்தையும் சீரமைத்து மக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். - ஜான்சன், தரங்கம்பாடி