திருச்சிராப்பள்ளி, செப்.9 - 17 ஆவது தேசிய சப்-ஜூனியர் ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி செப்.12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெறுகிறது. இதில் கடந்த ஜூலை மாதம் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கான பயிற்சி முகாம் திருச்சி கே.கே.நகரில் உள்ள சாய்ஜி ரோல் பால் மைதானத்தில் 10 நாட்கள் நடைபெற்றது. பயிற்சி முடித்த அணியினர், புனேவில் உள்ள ஸ்ரீ சத்ரபதி சிவாஜி உள்ளரங்கில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பதற்காக திங்களன்று திருச்சியிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். அவர்களை தென்னிந்திய ரோல்பால் சங்க செயலாளர் சுப்ரமணியம், ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் அசோசியேஷன் சங்க செயலாளர் கோவிந்தராஜ், மாநிலத் துணைத் தலைவர்கள் சரவணன், பிரேம்நாத், தமிழக தலைமை பயிற்சியாளர் ராஜசேகர், தஞ்சை ரோல்பால் சங்க செயலாளர் மணிகண்டன், ஆடவர் அணி பயிற்சியாளர் தணிக்கைவேல், பெண்கள் அணி பயிற்சியாளர்கள் காயத்ரி, திருச்சிராப்பள்ளி செயலாளர் மதுமிதா மற்றும் பயிற்சியாளர்கள் வாழ்த்தி வழி அனுப்பினர்.