அறந்தாங்கி, ஜன.4 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 ஊர்களை உள்ளடக்கியது நாட்டுமங்கலம் ஊராட்சி. இங்கு பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியை சேர்ந்த விவசாயி வீரன் திங்களன்று அதிகாலை காலமானார். இவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் மற்றும் குடியிருப்பு பகுதியினர், திங்களன்று மாலை வண்ணான்காடு சாலையில் உள்ள இடுகாட்டிற்கு தூக்கி செல்ல முயன்றனர். வழியில் மஞ்சனாகுளம் மற்றும் கரை பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யபட்டிருப்பதால், சமீபத்தில் பெய்த மழையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் மிகச் சிரமப்பட்டு சடலத்தை தூக்கி சென்றனர். இறந்தவர்களை தூக்கி செல்லக்கூட வழியில்லாததால், ஆக்கிரமப்புகளை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.