திருச்சிராப்பள்ளி, ஜூன் 19 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் ஆகியோருக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருச்சி மாநகராட்சியில் அநேகமாக அனைத்து பகுதி தெருக்களும், முக்கிய சாலைகளும் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் குடிநீர் குழாய் அமைக்கவும் தோண்டப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் பள்ளங்கள் மூடாமல் கிடக்கின்றன. இதனால் இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோர் கடுமையான பாதிப்புக்குள்ளாகிறார்கள். திருச்சி நகர வீதிகள் முழுவதும் குண்டும், குழியுமாக சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. தற்போது அமைக்கப்பட்ட சாலைகளைகூட, மீண்டும் குடிநீர் குழாய் அமைக்க தோண்டுவது, மக்கள் வரிப்பணத்தை வீணாக்குவது போன்றவை திருச்சி மாநகரில் நடந்த வண்ணம் உள்ளன. மேலும் குடிநீர் குழாய்கள் புதிய இணைப்பிற்கு மீட்டர் பொருத்தும் நடவடிக்கை என்பது குடிநீர் விநியோகம் தனியாரிடம் விடப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட பூங்காக்களின் செயற்கை நீரூற்றுகள் சிறிது காலத்திலேயே செயலற்றதாகி விட்டன. சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட தடுப்பு சுவர்களின் நடுவில் அலங்கார செடிகளை தண்ணீர் ஊற்றி பராமரிக்காததால், அவை பயனற்றதாகி விட்டன. முந்தைய ஆட்சியில் டெண்டர் விடப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தரமாக உள்ளதா? என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
திருச்சி மாநகரில் பல கோடி ரூபாயில் மேற்கொண்ட பணிகளிலும், தற்போது நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட தரமற்ற பணிகளிலும் பெரும் ஊழல் முறைகேடுகள் நடப்பதாக தெரிய வருகிறது. எனவே இதுகுறித்து உரிய ஆய்வுகளை நடத்த வேண்டும். மேலும் சென்ற அதிமுக ஆட்சியில் துவங்கி மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டமும் எந்த கால நிர்ணயமுமின்றி ஆமை வேகத்தில் நடந்து, தரமற்ற குழாய்கள் அமைத்தும், மூடிகள் தரமற்றதாகவும் போடப்பட்டுள்ளது. இதனால் மூடிகள் கழன்று வாகனங்களில் செல்வோருக்கு விபத்தை ஏற்படுத்தி வருகிறது. சாலைகளில் நடுவே உயரமாக உள்ள சாக்கடை தொட்டிகள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது குறித்தும் முறையான ஆய்வை நடத்திட வேண்டும். குடிநீர், பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கு ஒரே நேரத்தில் எல்லா பகுதிகளிலும் குழி தோண்டுவதை கைவிட்டு, பகுதிவாரியாக பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப் பணிகளை முடித்து தரமான சாலைகளை அமைத்திடவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் செய்து முடித்த பூங்காக்களை உரிய முறையில் பராமரித்திடவும், குடிநீர் திட்டத்தை தனியாருக்கு தரும் முயற்சியை கைவிடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.