தஞ்சாவூர், ஜூன் 27-
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில், அதி நவீன புற்றுநோய் கதிர்வீச்சுக் கருவிகள் மூலம் நான்கரை வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப் படுவதை பார்வையிட்டு, சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழுவினரை கல்லூரி முதல்வர் ஆர்.பாலாஜிநாதன் பாராட்டினார்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கரை வயது சிறுவனுக்கு, முளைக்கு செல்லக்கூடிய பகுதியில் உள்ள நரம்புப் பகுதியில் கட்டி போன்று புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதை யடுத்து அந்தச் சிறுவனுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் அறுவை சிகிச்சை செய்தனர்.
ஆனால் அந்த கட்டி முழுமையாக அகற்றப்பட வில்லை. அடிக்கடி தலையில் வலி வந்ததை அடுத்து, அந்த சிறுவனை பெற்றோர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து, அந்த சிறுவனுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்தபோது மூளைக்கு அருகே புற்றுநோய் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தற்போது சிறுவனுக்கு மூளைக்கு அருகே உள்ள புற்றுநோய் கட்டி கரைந்து வருவதை அதிநவீன கதிர்வீச்சு கருவிகள் மூலம் பார்வையிட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன், சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினரை பாராட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பாலாஜிநாதன் கூறியதாவது: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் கடந்தாண்டு ரூ.25 கோடி மதிப்பிலான அதிநவீன புற்றுநோய் கதிர்வீச்சு கருவிகள் அமைக்கப்பட்டது. இங்கு மருத்துவ நேரியல் முடுக்கி, உள் கதிரியக்க சிகிச்சை முறை, டெலிகோபிளட் ஆகிய சிகிச்சை முறைகள் அளிக்கப்படுகிறது.
கடந்தாண்டு இதுபோன்று ஒரு இளைஞருக்கு மூளைக்கு அருகே புற்றுநோய் கட்டி இருந்ததை, அதிநவீன புற்றுநோய் கதிர்வீச்சு கருவிகள் மூலம் கரைத்து குணப்படுத்தினோம். அதே போல் இந்தச் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுவனும் குணமடைந்து வருகிறான். இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை களில் ரூ.3 முதல் 5 லட்சம் வரை செலவாகும். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது” என்றார். அப்போது கதிர்வீச்சுத் துறை உதவிப் பேராசிரியர்கள் எஸ்.விஜயகுமார், சி.அனிதாகுமாரி, எம்.எஸ்.அருண், எஸ்.சக்தி பிர்யா, எஸ்.செல்வகுமார், ஆர்.ராஜகோபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.