மயிலாடுதுறை,ஜன.05- மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகேயுள்ள காளகஸ்திநாதபுரம் கிராமத்தில் சிவஸ்ரீ சிலம்பாலையம் தாய்கலை சிலம்பம் அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் வரவேற்றார். பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் சிலம்பாட்ட போட்டியை தொடங்கி வைத்தார். இப்போட்டியில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, மதுரை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 500 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திமுக தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், செம்பனார்கோயில் ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவர் ஐஸ்வர்யா செய்திருந்தார்.