districts

பஞ்சப்பட்டி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க கோரிக்கை

கரூர், அக்.16 - பஞ்சப்பட்டி அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் மாவட்ட பொருளாளர் கே.சுப்பிரமணியன் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் குடிப்பதற்கு சுகாதாரமான குடிநீர் இல்லாததால் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பல்வேறு நோய்த் தொற்றுகளை மாணவர்கள் தினமும் சந்தித்து வருகின்றனர். இவர்களின் உடல் ஆரோக்கியத்தில் மாவட்ட நிர்வாகம் கவனம் கொண்டு, பஞ்சப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் சுத்திகரிக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் பஞ்சப்பட்டியில் செயல்பட்டு வருகிறது. பஞ்சப்பட்டியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் சிகிச்சைக்காக தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகிறார்கள். இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், பொதுமக்களுக்கு தரமான மருத்துவம் கிடைப்பதில்லை‌.  மேலும் மருத்துவமனையில் தங்கி 24 மணி நேரமும் அவசர மற்றும் விபத்துகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும். பஞ்சப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு விவசாய கடன்கள் வழங்குவதில்லை. விவசாயக் கடன் கேட்டு வங்கிக்குச் செல்லும் விவசாயிகளை பல்வேறு காரணங்களை கூறி அலைக்கழிக்கிறார்கள்.  இது போன்ற நடவடிக்கைகளை வங்கி நிர்வாகம் கைவிட்டு, விவசாயிகளுக்கு கடன்களை வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.