சிஐடியு ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர், அக்.28 - பருவகால கொள்முதல் நிலைய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. 20 விழுக்காடு தீபாவளி பண்டிகைக் கால போனஸ் உயர்த்தி வழங்க வேண்டும். கூலி சிப்பத்திற்கு ரூ.30 உயர்த்தி வழங்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். இ.பி.எப், இ.எஸ்.ஐ பிடித்தம் செய்ய வேண்டும். பணியிடத்தில் மரணமடையும் தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். பருவகால கொள்முதல் நிலைய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தஞ்சை மண்டலம் சிஐடியு சுமைப் பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில், வாணிபக் கழக தஞ்சை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமைப் பணி சங்க மாவட்டச் செயலாளர் த.முருகேசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் பேசினார். சுமைப் பணி சம்மேளன மாநிலத் தலைவர் ஆர்.வெங்கடபதி நிறைவுரையாற்றினார். சிஐடியு மாவட்டப் பொருளாளர் பி.என். பேர்நீதி ஆழ்வார், மாவட்ட நிர்வாகிகள், சுமைப் பணி சங்க மாவட்ட பொருளாளர் சாந்தகுமார், நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர்கள் சங்கத்தினர், சேமிப்பு கிடங்கு செயலாளர் சசிகுமார், டாஸ்மாக் குடோன் தலைவர் சீனிவாசன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்பு, நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது. கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட அலுவலர்கள், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தனர்.