மயிலாடுதுறை பிப். 25 மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதானம் ஊராட்சியை சேர்ந்த தில்லைவிடங்கன் கிராமத்தில் 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் பெரியகுளம் என்ற பொது குளம் அமைந்துள்ளது. இந்தக் குளம் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தூர்வாரப் படாமல், கரைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் குளத்திற்கு வாய்க்கால் வழியாக தண்ணீர் வருவதற்கும், தண்ணீர் வெளியேறுவதற்கும் வடிகால் வாய்க்கால் வசதி இருந்தது. ஆனால், தண்ணீர் வந்து செல்வதற்கான வாய்க்கால்கள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் குளத்தை ஆகாயத் தாமரை கள் முழுமையாக ஆக்கிரமித்துள்ளன. இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் குளத்தை தூர்வாரி ஆழப்படுத்த எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. மேலும் நிலத்தடி நீரை இப்பகு தியில் உரிய முறையில் பாதுகாக்காததால் நிலத்தடி நீரும் தற்பொழுது உவர் நீராக மாறி வருகிறது. எனவே நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையிலும் பெரிய குளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.