பட்டுக்கோட்டை, ஏப்.24-
தரமான விதைகள், இடு பொருட்களை ‘அக்ரிகார்ட்’ இணைய தளம் மூலம் பெறலாம் என தஞ்சை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் விநாயக மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேளாண் விளைபொருட்களை நேரடியாக பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு உற்பத்தி சார்ந்த பொருட்களை எளிதாக கொள்முதல் செய்ய உதவவும், ‘டி.என்.எ.யு. அக்ரி கார்ட்’ ஆன்லைன் வர்த்தக சேவையை கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 14 அன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் https://www.tnauagricart.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி வேளாண் சார்ந்த பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். முதல்கட்டமாக, 15 வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இணையதளம் வாயிலாக, நெல், மக்காச்சோளம், பயிறு வகை, எண்ணெய் வித்து, பயிர் பூஸ்டர்கள், இடுபொருட்கள் காய்கறி விதைகளை ஆர்டர்’ செய்து, உரிய கட்டணம் செலுத்தி வீட்டு முகவரிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தரமான நெல் விதைகள், மக்காச்சோளம், டி.என்.எ.யு. காய்கறி விதை பாக்கெட், எண்ணெய் வித்துகள், பயிர் பூஸ்டர்கள், உயிரியல் இடுபொருட்கள் ஆகியவற்றை ‘டி.என்.எ.யு அக்ரிகார்ட்’ இணைய தளமூலம் பெற்று பயன் அடையலாம்’’ எனக் கூறப்பட்டுள்ளது.