முசிறி, பிப்.23 - திருச்சி மாவட்டம் முசிறி துறையூர் சாலையில் அமைந்துள்ள அமலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாதிரி தேர்வு எழுத சென்ற, பணம் செலுத்தாத 11 ஆம் வகுப்பு மாணவ- மாணவியர்களை பள்ளி நிர்வாகத்தினர் தேர்வு அறைக்குள் நுழைய விடாமல் கடும் வெயிலில் நிற்க வைத்து பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிய, சுமார் 30-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த செய்தியாளர் ஒருவர் அங்கு செய்தி சேகரிக்க சென்ற போது, செய்தியாளரை ஆசிரியர் ஒருவர் தாக்கும் நோக்கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பொதுமக்கள் வாயிலாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முசிறி காவல் உதவி ஆய்வாளர் முத்தையன் தலைமையிலான காவலர்கள், பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்திய பின், 9 மணிக்கு தேர்வு துவங்கிய நிலையில், 11 மணியளவில் மாணவ-மாணவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து கடும் சர்ச்சைகளுக்கு உள்ளாவதும், மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதும் ஏன் என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.