districts

img

மீன் விடும் நிகழ்ச்சி: நாகைமாலி எம்எல்ஏ பங்கேற்பு

நாகப்பட்டினம், நவ.22 -  உலக மீன்வள தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் இறையான்குடி ஊராட்சி பாண்டவ ஆற்றில் மீன் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி கலந்து கொண்டார். 1997 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 21 அன்று உலக மீன்வள தினம் கொண்டாடப்படுகிறது. நீரில் ஏற்படும் மாசுகளால் மீன் இனப்பெருக்கம் குறைவது, புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மீன் இனம் அழிந்து வருவது, மீன்பிடி சார்ந்த தொழிலாளிகள் சந்திக்கும் பிரச்சனைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மீன்வள தினம் கொண்டாடப்படுகிறது. இயற்கை மாற்றத்தால் ஏற்படும் சவால்கள், மீன்களைப் பிடிக்கும் வலை உள்ளிட்ட கருவிகளால் ஏற்படும் பிரச்சனை, பெருகிவரும் பிளாஸ்டிக் குப்பைகளால் ஏற்படும் மாசுகள் இவற்றைக் கருத்தில் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் நவம்பர் 21 அன்று மீன்வள தினத்தை அரசு கடைப்பிடிக்கிறது. கடல் நீர் மீன் பிடிப்பு, உள்நாட்டு மீன் பிடிப்பு என இரண்டு வகையில் மீன்பிடித் தொழில் நடந்து வருகிறது. மீன் இனப்பெருக்கத்தை உருவாக்கும் விதத்தில் ஆற்றில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ் தலைமை வகித்தார். இதில் மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி உள்ளிட்டோர் ஆற்றில் மீன் குஞ்சுகளை விட்டனர். கீழ்வேளூர் வட்டாட்சியர் க.ரமேஷ், சிபிஎம் கீழ்வேளூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்தையன், கிளைச் செயலாளர் ரஜினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.