தஞ்சாவூர், டிச.20 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், செல்லப்பிள்ளையார் கோவில் பகுதியில் வசித்து வருபவர் அ.நாகராஜன். தேநீர் கடை தொழிலாளியான இவருக்கு மனைவியும், ஆண், பெண் என இரு குழந்தைகளும் உள்ளனர். பேராவூரணி பகுதியில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை நாகராஜன், அவரது மனைவி பேராவூரணி சென்று விட்டனர். பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று விட்டனர். இந்நிலையில், காலை சுமார் 10 மணியளவில் இவரது ஓட்டு வீடு முற்றிலுமாக சரிந்து விழுந்தது. வீட்டில் எவரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.