தஞ்சாவூர், செப்.5- சனாதனத்தில் உள்ள கோட்பாடுகளை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். தஞ்சாவூரில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடங்களைத் திறந்து வைத்த பிறகு, அங்கிருந்த 4 ஆம் மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளிடம் காலை உணவு திட்டம் குறித்து கேட்டறிந்தேன். காலை உணவு திட்டத்துக்காகத் தமிழக முதல்வருக்கு மாணவ, மாணவிகள் நன்றி தெரிவித்தனர். குழந்தைகளிடமிருந்து உணர்வுபூர்வமாக வரக்கூடிய இந்த வார்த்தைகளை இத்திட்டத்தின் மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கிறோம். ஒரு வாரத்துக்கு முன்பு தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்துக்கு சென்றேன். இத்திட்டத்தை எங்களது முதல்வரும் செயல்படுத்தவுள்ளதாக அங்கிருந்த உயர்கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர். அடுத்த இரு நாள்களில், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளியில் காலை உணவுத் திட்டச் செயல்பாடுகளை தெலுங்கானா மாநில அலுவலர்கள் பார்வையிட்டனர்.
மிக விரைவில் தெலுங்கானாவிலும் தொடங்க இருப்பதாக, அம்மாநில அலுவலர்கள் கூறியதை இத்திட்டத்துக்கான மிகப்பெரிய வெற்றியாகக் கருதுகிறோம். சம்பா சாகுபடி குறித்து வேளாண் துறை ஆணையர் சமயமூர்த்தி, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பேசியுள்ளோம். அவர்களும் மிக விரைவில் வேளாண்துறை உயர் அலுவலர்கள் கூட்டம் நடத்தவுள்ளதாகத் தெரிவித்தனர். பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முதல் நடைபெறும். இதேபோல, நிகழாண்டும் செப்டம்பர் மாதம் முதல் நீட் உள்பட உயர் கல்வியில் சேருவதற்கான போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். மேலும், நீட் தேர்வுக்கு எதிராக அடுத்த கட்டப் போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, அவரே மிகத் தெளிவான விளக்கத்தைக் கூறியிருக்கிறார். நாங்கள் யார் மனதையும் புண்படுத்தவில்லை. அதில் இருக்கிற கருத்தியலுக்கு எதிராகச் சொல்லி இருக்கிறோம். அவர்கள் வைத்துள்ள சில கோட்பாடுகளில் சம தர்மமோ, சம நீதியோ இல்லாததை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தக் கோட்பாட்டைத்தான் உதயநிதி ஸ்டாலினும் சொல்லியுள்ளார். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.