districts

img

மனவளர்ச்சி குறைபாடு உடையோருக்கான சிறப்புப் பள்ளியில் மதிய உணவுத் திட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 12- புதுக்கோட்டை சீடு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் இயங்கும், கிரசண்ட் மனவளர்ச்சி குறைபாடு உடையோருக்கான சிறப்புப் பள்ளியில், மதிய உணவுத் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.  பின்னர் ஆட்சியர் பேசுகையில், “அரசு நிதியுதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் மனவளர்ச்சி குறைபாடுடையோருக்கான சிறப்புப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் செயல்படுத்தப்படும் 4 மனவளர்ச்சி குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளிகளில், 2 மனவளர்ச்சி குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளிகளுக்கு மதிய உணவு வழங்கிட அரசு அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை அம்பாள்புரம் 1-ஆம் வீதியில், சீடு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் இயங்கும், கிரசண்ட் மனவளர்ச்சி குறைபாடுடையோருக்கான சிறப்புப் பள்ளியில் மதிய உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் இப்பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கலந்துரையாடி மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்புக் கல்வி, மறுவாழ்வு பயிற்சிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறியப்பட்டது” என்றார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செ.உலகநாதன், சீடு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் க.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.