மயிலாடுதுறை, செப்.12 - அரசு மருத்துவமனையில் காதுகேளாதோர், வாய்பேசாதோர் கருவிகளை அமைக்க வேண்டுமென கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனையில் காது கேளாதோர், வாய் பேசாதோர்களை சோதனை செய்யும் கருவி (Audio Gram) அமைக்க கோரியும், அனைத்து மாவட்ட தலைமை அலுவலகங்களிலும் சைகை மொழி பெயர்ப்பாளர்களை அமைத்து கொடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் தமிழ்நாடு காதுகேளாதோர் வாய்பேசாதோர் உரிமைகளுக்கான தனி கிளை சார்பில் செவ்வாயன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் மேரி, ஷீலா, முத்துலட்சுமி, ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜீவா, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் புருஷோத்தமன், மாவட்ட தலைவர் டி.கணேசன் மற்றும் சங்க பொறுப்பாளர்கள் உரையாற்றினர். நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தையடுத்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததால், போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.