திருச்சிராப்பள்ளி, அக்.28 - திருச்சி ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றுப் படுகை யில் ஒருங்கிணைந்த குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இது திருச்சி மாவட்டத்தில் உள்ள குடிநீர் திட்டங் களில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த நீரேற்று நிலையம் மூலமாக 17.2 எம்.எல்.டி. குடிநீர் திருச்சி மாநகராட்சியுடன் சமீபத்தில் இணைக்கப்பட்ட திருவெறும்பூர், காட்டூர் மற்றும் அரியமங்கலம் பகுதியில் உள்ள 6 மாநகராட்சி வார்டு மக்களுக்கும், துவாக்குடி நகராட்சியைச் சேர்ந்த அனைத்து வார்டு மக்களுக்கும், கூத்தப்பார் பேரூராட்சி மக்களுக்கும், அதுமட்டுமின்றி கிராமப் புறங்களில் உள்ள 90 குடியிருப்பு பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வரு கிறது. இந்த நீரேற்று நிலையம் சமீபத்தில் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடுமையாக சேதம் அடைந்துள் ளது. அதை தொடர்ந்து தற்காலிகமாக அதனை சீரமைக்கும் பணிக்காக ரூ.3 கோடி யில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, தமிழ் நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீரை ராட்சத குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லும் பாலம் கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி சேதம் அடைந்தது. மேலும் ஆற்றில் ஏற்பட்ட வலு வான நீரோட்டம் காரணமாக ஏற்பட்ட அரிப்பி னால் பாலத்தின் தூண்களில் ஒன்று கீழே விழுந்துவிட்டது. இதனால் பாலத்தில் இருந்த நீர்வழிப் பாதை சேதமடைந்தது. பின்னர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி கள் அதனை தற்காலிகமாக சீர்செய்து அக்டோபர் 20 ஆம் தேதி முதல் குடிநீர் விநி யோகிக்கும் பணியை தொடங்கினர். ஆனால் நீர் விநியோகம் சீரமைக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள், மீண்டும் அக்.22 ஆம் தேதி பாலம் மேலும் சேதம் அடைந்ததால் குடிநீர் விநியோகத்தை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். அதை சரி செய்த பிறகு அக்.23 ஆம் தேதி மீண்டும் தண்ணீர் விநியோகத்தை தொடங்கினர். ஆனால் பாலத்தில் மேலும் இரண்டு தூண்கள் கீழே இறங்கி விட்டதால் அவர்களால் அதை தொடர முடியவில்லை. பின்னர் பல தொழில்நுட்ப வழிமுறை களை கையாண்டு சீரமைத்து ஓரளவுக்கு தண்ணீர் உபயோகித்ததை தொடங்கியுள்ள னர். இருப்பினும் வடகிழக்கு பருவமழை காலத்தில் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டால் மேலும் இந்தத் திட்டம் தடைகளை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழைக்கு பின்னர் நிரந்தரமாக மேற்கண்ட குடிநீர் திட்ட பணிகளை சீரமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதில் சேதமடைந்த இரும்பு குழாய்கள் தற்காலிக நடவடிக்கையாக அதிக அடர்த்தி கொண்ட பாலிஎத்திலின் குழாய்களாக மாற்றப்பட உள்ளன. மேலும் சில பணிகளை உடனடியாக மேற்கொள்ள இருப்பதாகவும், முதற்கட்ட மதிப்பீட்டின்படி ரூ. 3 கோடி தேவைப்படும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது. பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்கும் திட்டப் பணிகள் விரைவில் தொடங் கும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி கள் தெரிவித்தனர்.