districts

img

காடம்பாக்கம் கிராமத்திற்கு கூட்டுக் குடிநீர் திட்டம்

மயிலாடுதுறை, பிப்.25 - மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்திற்குட்பட்ட கடக்கம் ஊராட்சி, காடம்பாக்கம் கிராமத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.36.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில், சீர்காழி ஒன்றியத்திற்குட்பட்ட 7 ஊராட்சிகளில் உள்ள 32 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த, நீர் உறிஞ்சி கிணறுகள், நீர் சேகரிப்புத் தொட்டி, நீர் உந்த அறை ஆகியவைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்காக மயிலாடுதுறை வட்டாரத்திற்குட்பட்ட காடம்பாக்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் 4 எண்கள் நீர் உறிஞ்சி கிணறுகள், நீர் சேகரிப்புத் தொட்டி மற்றும் நீர் உந்து அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 26.38 கி.மீ நீளம் நீரேற்று குழாயும், 29.325 கி.மீ நீளம் நீர் உந்து குழாய் மற்றும் 7 இடைநிறுத்த தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் சீர்காழி வட்டாரத்திற்குட்பட்ட திருப்புங்கள், மருதங்குடி, புங்கனூர், நெம்மேலி, கன்னியாக்குடி, பெருமங்கலம், கற்கோவில் ஆகிய 7 ஊராட்சிகளைச் சேர்ந்த 32 கிராம மக்கள் பயன்பெறுவர்.