நெல் கொள்முதலில் முறைகேடு: 88 பேர் பணியிலிருந்து விடுவிப்பு
தஞ்சாவூர், பிப்.5- தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில், ரூ.28.35 லட்சம் முறைகேடு செய்ததாக 37 பட்டியல் எழுத்தர்கள், 51 உதவியாளர்கள் என மொத்தம் 88 பேர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். கடந்த 2020 - 2021 மற்றும் 2021 - 2022 ஆம் கொள்முதல் பருவ ஆண்டுகளில் தஞ்சாவூர் மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விழிப்பு பணி அலுவலர்கள் 56 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கான ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு ரூ.28.35 லட்சம் வரை தொகை இழப்பு ஏற்பட்டிருப்பதும், இயக்க இழப்பைச் சரி செய்யும் நோக்கில் சேமிப்பு கிடங்குகளில் பணியாற்றும் கணினி இயக்குபவர்கள் மூலம் பிள்ளையார்பட்டி, புனல்குளம், சந்தானபுரம், சென்னம்பட்டி ஆகிய கிடங்குகளில் எடை குறைவாக ஒப்படைக்கப்பட்ட நெல்லுக்கான ஒப்புதல் ரசீதை, கணினி மூலம் திருத்தம் செய்து போலியான ஒப்புதல் சீட்டு தயார் செய்திருப்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, 37 பருவகால பட்டியல் எழுத்தர்கள், 51 பருவகால உதவியாளர்கள் என 88 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டார். மேலும், அவர்களிடமிருந்து இழப்புத்தொகையைப் பிடித்தம் செய்து, அவர்களைக் கருப்புப் பட்டியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, ஜனவரி 25 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் 88 பேரும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
ஆதாருக்காக பாபநாசம் தலைமை அஞ்சலக வாசலில் காத்திருக்கும் பொதுமக்கள்
பாபநாசம், பிப்.5- பாபநாசம் - சாலியமங்கலம் சாலையில், புதிய பேருந்து நிலையம் அருகில், பாபநாசம் தலைமை அஞ்சலகம் உள்ளது. இங்கு ஆதார் அட்டை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், தலைமை அஞ்சலகத்தின் வெளிப்புற கேட் எட்டு மணி அளவில் தான் திறக்கப்படுகிறது. ஆனால் காலை 5 மணிக்கு மேலிருந்தே பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பொதுமக்களும், சிறுவர், சிறுமிகளும் காத்திருக்கின்றனர். இதுகுறித்து, பசுபதி கோவிலில் இருந்து வந்திருந்த ஒருவர் கூறுகையில், 5 மணிக்கு மேல் பிள்ளைகளின் ஆதாருக்காக காத்து நிற்பதாகவும், பள்ளிகளில் ஆதார் கேட்பதால் வந்து நிற்பதாகவும் தெரிவித்தார். மற்றொருவர் கூறுகையில், எங்கு சென்றாலும் ஆதார் கட்டாயமாகி விட்டது. பனியில் நிற்பது சிரமமாக உள்ளது. குழந்தைகள், வயதானவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சாலையை ஒட்டி நிற்பதால் வாகனங்கள் அதிகமாக சென்று வருகின்றன. எனவே சிரமப்படாத வகையில் காத்திருப்பதற்கான ஏற்பாட்டினை அஞ்சலக நிர்வாகம் செய்ய வேண்டும் என்றார்.
விதிமுறைகளை மீறும் எடைமேடை நிர்வாகிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
எடையளவு சட்ட கட்டுப்பாட்டு அலுவலர் எச்சரிக்கை
பெரம்பலூர், பிப்.5- பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் கொள்முதல் செய்யும் வணிகர்கள், மக்கச்சோளம் எடை அளவு பார்க்கும் எடைக் கருவிகளில் முறைகேடு செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதிகளிலுள்ள எடைக் கருவிகளை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), சட்டமுறை எடையளவு துணை கட்டுப்பாட்டு அதிகாரி கா.மூர்த்தி மற்றும் பெரம்பலூர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் கோ. ராணி ஆகியோர் செவ்வாய்க்கிழமை கூட்டாய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, சட்டமுறை எடையளவு துணை கட்டுப்பாட்டு அலுவலர் கா.மூர்த்தி கூறியதாவது; மக்காச்சோள விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை எடைமேடைகளில் எடையிடுவதற்கு முன்பு எடை இயந்திர அளவீடு பூஜ்ஜியத்தில் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். மேலும் விளைபொருட்களுடன் கூடிய வாகனத்தையும், விளைபொருட்கள் இறக்கிய பின் காலி வாகனத்தையும் ஒரே எடைமேடையில் எடையிட வேண்டும். மேலும் ஒவ்வொரு முறையும் மேற்கண்டவாறு எடையிட்டு நிகர எடை கணக்கிடப்பட வேண்டும். 200 கிலோவுக்கு குறைவான விளைபொருட்களை மேற்படி எடைமேடையில் எடையிடக்கூடாது. எடைமேடை நிர்வாகிகள் தங்களது எடை மேடையை ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் சட்டமுறை எடையளவு சட்டத்தின்படி மறு முத்திரையிட வேண்டும். அவ்வாறு மறுமுத்திரையிடப்பட்ட சான்றினை பொதுமக்கள் பார்வையில் படும்படி காட்சிப்படுத்த வேண்டும். அலுவலர்கள் ஆய்வின்போது விதிமுறைகளை மீறும் எடைமேடை நிர்வாகிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எடைமேடை இயந்திரத்தின் முத்திரை சேதம் ஏற்பட்டால் உரிய அதிகாரியிடம் மீண்டும் மறுமுத்திரையிட்டே எடை மேடையை பயன்படுத்த வேண்டும். தவறினால் சம்பந்தபட்ட எடைமேடை நிர்வாகிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் யாரேனும் எடை மேடைகளில் எடையளவு முரண்பாடுகளை கண்டறிந்தால் 9445398759, 9751921795 ஆகிய செல்போன் எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என்றார்.
பிப்.12 இல் முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்
அரியலூர், பிப்.5- அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கு குறைதீர் கூட்டம் பிப்.12 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. எனவே, அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் படைப்பணியில் பணிபுரிபவர்களைச் சார்ந்தோர்கள், தங்களது கோரிக்கையினை மனுவாக அளித்து பயனடையலாம் என ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
கோழிக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்
அரியலூர், பிப்.5- அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் பிப்.14 ஆம் தேதி வரை நடைபெறும் கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமை, கோழி வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி இரு வார சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு பிப்.1 முதல், பிப்.14 வரை இருவாரங்கள் கோழிகளுக்கான “கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி சிறப்பு முகாம் அனைத்து கிராமங்களிலும் நடைபெறுகிறது. இம்முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்த தடுப்பூசி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, அனைத்து கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டு பயன்பெறலாம் என்றார்.
பாபநாசம் அரசினர் ஆண்கள் பள்ளியில் நூற்றாண்டு விழா
பாபநாசம், பிப்.5- பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணா துரை தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் சாரதி, பள்ளி தலைமையாசிரியர் மணியரசன் முன்னிலை வகித்தனர். முன்னதாக உதவி தலைமை ஆசிரியர் லோகநாதன் வரவேற்றார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கௌரவத் தலைவர் நாகராஜன், நூற்றாண்டு மலரை வெளியிட்டார். நமக்கு நாமே திட்டத்தின் மூலம் நூற்றாண்டு விழா நினைவு வளைவு கட்ட ரூ.2 லட்சத்திற்கான காசோலையை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் செல்வ முத்துகுமரன், அமெரிக்காவில் பணிபுரியும் ரவிக்குமார் ஆகியோர் வழங்கினர். திமுக தஞ்சை வடக்கு மாவட்ட துணை செயலர் அய்யராசு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் துரை, பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, பேரூராட்சி கவுன்சிலர்கள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முதுகலை ஆசிரியர் பெர்னாட்ஷா நன்றி கூறினார்.
உழவன் செயலியில் தனியார் அறுவடை இயந்திர உரிமையாளர்களின் விவரம் அறியலாம்
தஞ்சாவூர், பிப்.5- தஞ்சாவூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம், தனியாருக்குச் சொந்தமான நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்களின் விவரங்கள், உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, விவசாயிகள் உழவன் செயலியை தங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து, உரிய வழிமுறைகளைப் பின்பற்றி தனியாருக்கு சொந்தமான நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்களின் விவரங்களை எளிதில் அறிந்து பயன் பெறலாம். உழவன் செயலியினுள் சென்று ‘தனியார் இயந்திர உரிமையாளர்கள் பற்றி அறிய’ என்ற விவரத்தினை தேர்வு செய்து, பின்னர் ‘அறுவடை இயந்திரங்கள் என்பதை தேர்வு செய்யவும். அதன் பின்னர் மாவட்டம் மற்றும் வட்டாரத்தினை தேர்ந்தெடுத்து ‘தேடுக’ என்பதைத் தெரிவு செய்தவுடன் தங்களுக்குத் தேவையான, தனியாருக்குச் சொந்தமான நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்களின் விவரங்கள் திரையில் காண்பிக்கப்படும். அதில் தங்களுக்குத் தேவையான இயந்திரங்களின் உரிமையாளர்களை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். மேலும், வேளாண்மைப் பொறியியல் துறைக்குச் சொந்தமான பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,880/- எனவும், டயர் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,160/-எனவும் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே, தனியார் இயந்திரங்கள் மட்டுமின்றி வேளாண்மைப் பொறியியல் துறை அறுவடை இயந்திரங்களை உழவன் செயலி மூலம் பதிவு செய்து பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறலாம்” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.