districts

img

குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி திறப்பு

தஞ்சாவூர், டிச.27-  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில், புதன்கிழமை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ரூ.171 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் உள்ள ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி கட்டிடத்தினை, முதலமைச்சர் காணொலி காட்சியில் திறந்து வைத்தார்.  இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர்  எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் ஆகியோர் பார்வையிட்டு, பொதுமக்கள், மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்த விடுதியில் ஒரு தங்கும் அறைக்கு 10 மாணவியர் வீதம், மொத்தம் 5 தங்கும் அறைகளும், காப்பாளினி அறை, அலுவலக அறை, உணவு தயாரிப்பதற்கான சமையலறை கூடம், மேசை இருக்கைகளுடன் கூடிய உணவுக்கூடம், குளியல் மற்றும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.