திருச்சிராப்பள்ளி, டிச.25 - திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையத்தை ஜனவரி 2 இல் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.951 கோடியில் புதிய முனையம் அமைக்கும் பணியை கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்.10 அன்று பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார். இப்பணிகளை 2021 செப்டம்பர் மாதத்துக்குள் முடித்து புதிய முனையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர விமான நிலைய ஆணையக் குழுமம் திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் முற்றுப் பெறாத நிலையில் 2021, 2022, 2023 ஆகிய மூன்றாண்டுகளும் தள்ளிப் போயின. அடுத்தடுத்து 2, 3 முறை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையிலும், பணிகள் முடிவடையாததால் விழா நடத்தப்படவில்லை. இதனைத் தொடர்ந்து கூடுதலான பணியாளர்கள் மூலம் கடந்த சில மாதங்களாக இரவு, பகலாக பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்த புதிய முனையத்தை ஜனவரி 2 அன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். விமான நிலைய வளாகத்தில் பாஜக முக்கிய பிரமுகர்கள் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர காவல் ஆணையர் ந.காமினி தலைமையிலான போலீசார் கடந்த இரு நாட்களாக மேற்கொண்டுள்ளனர். பல்கலை. பட்டமளிப்பு விழா இந்நிகழ்வைத் தொடர்ந்து, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 38 ஆவது பட்டமளிப்பு விழாவிலும், பிரதமர் பங்கேற்று பட்டங்களை வழங்குகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படாத நிலையில் உள்ள, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியருக்கும் பட்டங்கள் வழங்கப்படும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய முனையத்தின் சிறப்பம்சம்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையம் 60,723 ச.மீ. பரப்பளவில் 2 அடுக்குகளைக் கொண்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பன்னாட்டு பயணிகளையும், 1,500 உள்நாட்டு பயணி களையும் கையாளக் கூடிய வகையில் குடியேற்றப் பிரிவினருக்கான 40 செக் அவுட் மற்றும் 48 செக் கவுன்ட்டர்கள், விமானங்கள் நிறுத்த 10 ஏப்ரான்கள் மற்றும் ஏரோ பிரிட்ஜ் (விமானத்திலிருந்து முனையத்தில் நுழையும் பகுதி), 26 இடங்களில் லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்), சுங்கத் துறையினருக்கென 3 சோதனை மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள், 3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகளுடன், விமான நிலைய வளாகத்தில் சுமார் 1,000 கார்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தேசத்தின் நாகரிகம், கலாச்சாரம், பண்பாடுகளை பறைசாற் றும் விதமாக நிலைய வளாகத்தில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் போன்ற மாதிரி கோபுரம் புதிய முனையத் தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, வருகை, புறப்பாடு, பயணிகள் காத்திருப்பு அறைகள் உள்ளிட்ட பகுதிகளில் புதிய அதிநவீன வசதிகளுடன் உள்கட்டமைப்பு மற்றும் அலங்காரம் செய்யப்பட்டுள் ளது. சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையில் புதிய முனையத் தின் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.75 கோடி செலவில் சுமார் 42.5 மீ உயரம் கொண்ட கண்காணிப்பு கோபுரத்துடன்கூடிய வான் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.